By Village Missionary Movement
Tuesday, 23-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 23.09.2025
நமக்குள் ஆவியானவர்
"பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து;... எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்" - அப். 1:8
பரிசுத்த ஆவியானவரை நமக்குள் தக்கவைத்துக் கொள்வது எப்படி? அதாவது நாம் எதையெல்லாம் செய்தால் அவர் நம்மில் மகிழ்வார் என்பதை பற்றி பார்ப்போம். ஆவியானவர் ஆள்தத்துவம் உடையவர். அவருக்கு விருப்பமில்லாத காரியங்களை நாம் செய்தால் நம்மை விட்டு விலகிவிடுவார். ஒரு பிரிட்டிஷ் தம்பதியினர் மிஷனெரியாக இஸ்ரேல் தேசத்திற்கு, தங்கள் சபையினரால் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கே ஒரு வீடு கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த வீட்டில் இருந்து கொண்டு தங்கள் பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள். புறா ஒன்று அவர்கள் வீட்டில் தங்க ஆரம்பித்தது. அதை பார்த்த அவர்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.
தினமும் அந்த புறாவை கவனித்த அந்த கணவர் அதன் நடவடிக்கையில் ஒரு மாற்றத்தை பார்த்தார். அது என்னவென்றால் அவர்கள் வீட்டில் சத்தமாக பேசும்போதோ, கதவை வேகமாக இழுத்து பூட்டும் போதோ அதாவது வீட்டிலிருந்து எப்போதெல்லாம் அதிக சத்தம் வருகிறதோ, அப்போதெல்லாம் உடனே அந்த புறா பறந்து வீட்டை விட்டே ஓடிவிடும். சில சமயங்களில் மீண்டும் வீட்டிற்கே திரும்ப வராது. இது அந்த கணவருக்கு கவலையை கொடுத்தது. புறா இனிமேல் வீட்டிற்கே வராதா என்று யோசித்த அவர் தன் மனைவியிடமும் அதை பகிர்ந்து கொண்டார். அவரது மனைவியும் ஆமாம், நானும் அந்தப் புறா செய்வதை கவனித்தேன். இதே நிலைமை தொடர்ந்தால் அந்தப் புறா நிரந்தரமாக நம் வீட்டிற்கு வராமல் போய்விடுமோ என்று நானும் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். ஆகையால் இனிமேல் இந்த புறாவை நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்க, அமைதியான சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்று கணவனும் மனைவியும் முடிவு எடுத்தார்கள். அந்த புறாவால் தன்னை மாற்றிக் கொள்ள முடியாது. நாம் தான் நம் செயல்பாடுகளை அந்த புறாவுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டார்கள்.
ஆம், பிரியமானவர்களே இப்படித்தான் ஆவியானவரும் அவருக்கு பிரியமில்லாததை நாம் செய்யும் போது துக்கத்தோடு நம்மை விட்டு செல்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருவது தெரியும், நம்மை விட்டு போவது தெரியாது. அவர் மிகவும் மென்மையானவர். ஆகவே மிகுந்த கவனத்தோடு ஆவியானவர் நம்மை நடத்த விட்டுக்கொடுக்க வேண்டும். "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" என்று ரோமர் 8:14 ல் வாசிக்கிறோம். அவருடைய வழிநடத்துதலின்படி நாம் நடந்தால் அவர் நம்மில் மகிழ்வார். "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார்". நாம் ஆவியானவரின் சத்தத்திற்கு செவி கொடுத்து, அவரைப் பின்பற்றினால் பரலோகத்திற்கு செல்ல முடியும். நம் வழிகளை நாம் நிதானித்து யோசித்துப் பார்ப்போம்.
- Mrs.திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:-
நமது கிளை அலுவலகங்களில் பணி செய்யும் ஊழியர்களை தேவன் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864