By Village Missionary Movement
Tuesday, 16-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 16.09.2025
உழைப்பாளியான ரூபவதி
"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10
செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமையும், பொருளாசையும் நிறைந்த இந்த உலகம் மிகவும் பெரிது. இதைப் பார்த்து மயங்கியவர்கள் கணக்கில் அடங்காதோர். இதன் மத்தியில் போராட்டங்கள், நிந்தைகள், அவமானங்கள் என சமுதாயத்தில் சோர்ந்து போய் நலிவுற்று பின்மாற்றம் அடைந்து எதை நோக்கி செல்கிறோம் என அறியாமல் திகைத்துப்போய் நிற்கின்ற பெண்கள் ஏராளம்! ஏராளம்! இந்நாட்களில் அழகு இருக்கும் இடத்தில் குணமில்லை. ஆனால் பூரணரூபவதியாய் விளங்கிய ஒரு பெண் குணசாலியாகவும் இருந்திருக்கிறாள். தொடர்ந்து வாசியுங்கள்.
ஆதியாகமம் 24ம் அதிகாரத்தில் ரெபெக்காள் என்ற பெண்மணியைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. அந்தப்பெண் மகாரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள். அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள். இந்த ரெபெக்காள் ஆபிரகாமின் ஊழியக்காரருக்கு மறுபேச்சு ஒன்றும் பேசாமல் தன்னிடத்தில் இருந்த குடத்தை இறக்கி ஊழியக்காரருக்கும், அவருடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள். இந்த இடத்தில் ரெபெக்காள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறாள். முன் பின் அறியாத ஒருவர், வேலைக்காரர் போல் தெரிகிறார் என்று தன் மனதில் அற்பமாய் எண்ணாமல் கனத்துடன் விசாரிப்பது, உபசரிப்பது இவற்றிலிருந்து ரெபெக்காளின் நற்குணங்களை நாம் அறியலாம். வேலைக்காரரின் கேள்விகளுக்கு ரெபெக்காளின் பதிலும் மிகுந்த தாழ்மையாகவே இருந்தது.
இன்று இருக்கின்ற பெண்களுக்கும் வாலிபப் பெண் பிள்ளைகளுக்கும் ஊக்கத்துடன் சவால் கொடுக்கும் பெண் ரெபெக்காள். இதை வாசிக்கிற நீங்கள் வாலிப சகோதரியாக இருக்கலாம். நான் அதிகமாய் படித்துள்ளேன். என் படிப்பிற்கு ஏற்ற வேலை இன்னும் கிடைக்கவில்லை. அதனால்தான் வீட்டில் சும்மா இருக்கிறேன் என்று சோம்பலாக இருக்க பழகி விடாதீர்கள். உங்கள் படிப்பிற்கு ஏற்றபடி இல்லாமல் குறைந்த வேலை எதுவாக இருந்தாலும் அதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஏற்றநேரம் வரும்வரை தேவனுடைய சித்தத்துக்கு அர்ப்பணித்து காத்திருங்கள். காத்திருந்து பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதம் நிச்சயமாக மேன்மையானது. காத்திருக்கும் நாட்களில் ஆண்டவருக்குக் கீழ்ப்படிதல், தாழ்மை இருக்கும் என்றால் அதுவே நம்மை நல்ல குணவதியாய் மாற்ற வல்லது. ரெபெக்காளின் வாழ்க்கையை ஆசீர்வாதமாக மாற்றியவர் நிச்சயம் உங்களுடைய வாழ்வையும் மாற்றுவார்.
- Mrs. கிரேஸ் ஜீவமணி
ஜெபக்குறிப்பு:-
வட மாநிலங்களில் நம் பணித்தளங்களில் தேவையுள்ள இடங்களில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள். .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864