By Village Missionary Movement
Friday, 12-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 12.09.2025
பலன் உண்டு
"...என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல்,... நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" - ஏசாயா 55:11
கர்த்தருடைய வசனம் செல்ல முடியாத இரும்புத்திரை தேசங்களுக்குள் தேவனுடைய வசனத்தை அனுப்புவதற்காக ஒரு சுவிசேஷக் குழுவினர் ஒரு புதிய யுத்தி செய்தனர். ஆயிரக்கணக்கான காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கி, அதற்குள் மாற்கு எழுதிய சுவிசேஷத்தை வைத்து, அமெரிக்கா தேசத்திலுள்ள கலிபோர்னியா கடற்கரையிலிருந்து அதை ஜெபத்துடன் தண்ணீருக்குள் தள்ளி விட்டனர். இந்த சம்பவம் 1978, ஏப்ரல் 15 ஆம் தேதி நடந்தது. இந்த சுவிசேஷக் குழுவினரும் தங்கள் ஜெபத்தை விடவே இல்லை, தொடர்ந்து ஜெபித்தனர். இதன் விளைவாக பல வருடங்கள் கழித்து ஒரு வாலிபனின் சாட்சியை கேட்க நேர்ந்தது. ஒரு நாள் அந்த வாலிபன் தன்னையும் அறியாமல் கடற்கரைக்குச் சென்றதாகவும், தனிமையில் அமர்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏதோ ஒன்று தன்னையே நோக்கி மிதந்து வந்தது. அவன் ஓடிச் சென்று எடுத்தபோது, அதில் கர்த்தருடைய வார்த்தை இருந்தது. அதைப் படித்து கர்த்தருக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தானாம். அழிவுக்கு நேராய் ஓடிக்கொண்டிருந்த தன் வாழ்வு ஜீவனுக்கு நேராய் திருப்பப்பட்டதையும் சாட்சியாக அறிவித்தான்.
கர்த்தருடைய திட்டம் இந்த வாலிபன் மேல் இருந்தபடியால், தேவனுடைய வார்த்தை மூன்று ஆண்டுகாலமாக கடலில் பயணித்து ஏறக்குறைய 5,100 மைல் தொலைவிலுள்ள குறிக்கப்பட்ட மனிதனிடம், குறிக்கப்பட்ட நேரத்தில் சென்று சேர்ந்தது. "உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்"(பிரசங்கி 11:1) என்று வேதம் சொல்கிறது. அந்த ஒரு பாட்டில் 3 வருடமாக கடலிலே பயணம் செய்து இந்த குறிப்பிட்ட வாலிபனின் கைகளை சென்றடைந்துள்ளது. இந்த வாலிபன் இருந்த இடம் 'கிரிபாடி' என்ற தீவிலுள்ள 'மைக்ரோ நிசியா'.
இதை வாசிக்கும் நண்பரே! கர்த்தர் தம் வார்த்தையை எப்படி நிறைவேற்றுகிறார் பாருங்கள். இதைப் போல நம் வாழ்விலும், நம்மைக் கொண்டு செய்ய வேண்டுமென கர்த்தரால் குறிக்கப்பட்டவைகள் நிச்சயம் நிறைவேறும். தேவன் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்கள் காலம் வரும்போது நிச்சயம் நிறைவேறும்.
உண்மையாய் ஊழியம் செய்தும் பலன் கிடைக்கவில்லையா? மூன்று வருடமென்ன, முப்பது வருடமானாலும் உங்களுக்கென்று கர்த்தர் வைத்துள்ளது உங்களிடம் வந்து சேரும். பார்வோனிடம் ஒடுக்கப்பட்ட இஸ்ரேல் ஜனங்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை தொடர்ந்து செய்தனர். அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனை கர்த்தரே அவர்களுக்குக் கொடுத்து விடுவித்தாரே. "இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது... இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது" (1 சாமுவேல் 9:24). கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
- Mrs.பிரிசில்லா தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு:-
டியூஷன் சென்டரில் கற்றுத் தரும் ஆசிரியர்கள் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864