By Village Missionary Movement
Saturday, 06-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 06.09.2025
சீஷனா?கிறிஸ்தவனா?
"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்" - லூக்கா 14:27
கிறிஸ்தவப் பெயர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழாதவன் கிறிஸ்தவனாயிருக்க முடியாது. அவ்வாறே கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டு வாழ்ந்தால் மட்டும் போதாது. அவருடைய சீஷர்களாய் வாழவேண்டும் என்பதே கிறிஸ்துவின் கட்டளையாயிருக்கிறது. ஆகவே தான் இயேசு கிறிஸ்துவும் தம்மைப் பின்பற்றி வந்தவர்களிடம், சீஷனாக விரும்புகிறவன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இயேசுவிடம் வருகிறவன், தன் தகப்பனையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், சகோதரரையும், சகோதரிகளையும் தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான், என்று மிகத் தெளிவாக கூறினார். அது மாத்திரமல்ல, தன் சிலுவையைச் சுமந்துகொண்டு, எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் என்றும் கூறினார். அவர்களை வெறுக்க வேண்டும் என்றல்ல எல்லோரையும் விட தேவனுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதே அதன் பொருள். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை அல்ல. பிரச்சனைகளின் மத்தியிலும் நம்மை நடத்துகிற ஆண்டவர் நமக்குண்டு.
இயேசுவின் சீஷனாகிய யோவான் எழுதின சுவிசேஷ புத்தகத்தில், உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். அனுதினமும் அவர் நமக்குச் கொடுக்கிற சிலுவையை சுமந்து கொண்டு, அவர் பின்னே செல்ல வேண்டும். அவரோடே கூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவர் ஆளுகை செய்வது போல், நாமும் ஆளுகை செய்வதற்காகவே நம்மையும் சிலுவையின் பாதையில் நடத்துகிறார். வேலைக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, எஜமானுடைய சித்தத்தை அறிந்து செயல்படுகிறவனே உத்தமமான வேலைக்காரனாக எண்ணப்படுவான். அது மாத்திரமல்ல, கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றும் இயேசு கூறினார்.
ஆகவே, நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நாம் பெயர் கிறிஸ்தவர்களா? அல்லது சீஷர்களா? அவருடைய சீஷர்களாய் இருப்பதற்கென்றே நம்மை அழைத்திருக்கிறார், நம்மை வேறு பிரித்தும் இருக்கிறார். இயேசுவை விட வேறு எதையும் அதிகமாக நேசிக்க கூடாது. இயேசு இந்த உலகத்தைவிட்டு எடுத்துக் கொள்ளப்படும் முன்பு தம்முடைய சீஷர்களிடம் "நீங்கள் உலகமெங்கும் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள் என்றார்." அவருடைய கட்டளையை நிறைவேற்றும்படி நாமும் சீஷர்களாய் வாழ்ந்து, மற்றவர்களையும் சீஷராக்குவோமாக! ஆமென்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:-
எழுப்புதல் வாலிபர் முகாம் மூலம் இயேசுவின் அன்பிற்குள் வந்தவர்கள் அருகிலுள்ள திருச்சபைக்கு சென்று நிலை நிற்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864