By Village Missionary Movement
Tuesday, 01-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 01-06-2021
கன்மலை உச்சிக்கு ஏறுவோம்
“…அவர் (இயேசு) ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.” – லூக்கா 6:12
இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லக்கூடிய விமானம் ஒன்றில் விஷப்பாம்புகள் அடங்கிய பெரிய பெட்டியொன்று பூட்டப்படாமல் மறதியாக வைக்கப்பட்டிருந்தது. விமானம் கீழிருந்து மேலாக எழும்பினபோதோ எதிர்பாராமல் பெட்டி திறந்துகொள்ள, அவைகள் ஒவ்வொன்றாக பயணிகளின் இருப்பிடத்தை நோக்கி வெளியே வர ஆரம்பித்தன. திடீரென்று பயணிகளிடமிருந்து பெரும் கூக்குரல் கேட்டது. சிலர் மயங்கி விழுந்தனர். சிலர் பாம்பினால் கடிபட்டு உயிருக்கு போராடினர். பாம்புகளைப் பற்றிய செய்தி விமான ஓட்டிக்கு தெரியப்படுத்தப்பட்டவுடன் அவர் மிகவும் பயந்தவராக கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு விஷயங்களை சொல்லி, “விமானத்தை எங்கு தரையிறக்க வேண்டும்” என்று பதட்டமாய்க் கேட்டார். அதற்குக் கண்ட்ரோலரோ, “கீழே இறங்கவேண்டாம், ஒரு நிமிடம் நான் யோசிக்க வேண்டும்” என்று சொல்லி அதன்பின் “எவ்வளவு உயரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு விமானி, “4000 அடி உயரத்தில்” என கூற, “இன்னும் உயர போங்கள்” என்றார். ஒன்றும் நடக்கவில்லை, “இன்னும் உயர, இன்னும் உயர” என்று கட்டளையிட்டுக் கொண்டே இருந்தார். கடைசியாக மிக உயரத்தில் சென்றபோது, பாம்புகள் ஆக்ஸிஜன் இல்லாததால் மயக்கமடைந்து செயலிழந்து போயின. எல்லா பாம்புகளையும் மீண்டும் பெட்டியில் போட்டு அடைத்து அதன்பின் பெரிய பூட்டுப் போடப்பட்டது. மயக்கம் அடைந்தவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு, ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் காக்கப்பட்டார்கள்.
பிரியமானவர்களே! சாத்தானின் வல்லமைகளுக்கு நாம் தப்ப வேண்டுமானால் நாம் உயர செல்லத்தான் வேண்டும். இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசானவன் நாம் இந்த உலகத்தில் இருக்கும் காலம்வரைக்கும் நம்மை பாழ்ப்படுத்திகொண்டே தான் இருப்பான். ஆனால் நாம் நம் ஜெபத்தில் கர்த்தரை நோக்கி உயரே செல்ல செல்ல அவன் செயலிழந்து போவான். அவனுடைய தந்திரங்களும், அக்கினியாஸ்திரங்களும் தேவனை நோக்கி மேலே மேலே போகிறவர்களிடம் பலிக்கிறதில்லை.
அந்நாட்களிலே, இயேசு ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். அவர் கீழேயே இருந்து ஜெபிக்கலாமே, ஏன் மலைக்கு சென்றார்? அங்கு யாருடைய தொந்தரவும் இல்லாமல், இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபித்து, பெலத்தின் மேல் பெலத்தை பெற்றுக்கொண்டார். நாமும் அழியாதபடி கன்மலையாகிய கிறிஸ்துவினிடத்தில் ஓடிப்போய், அவரைப் பற்றிக்கொள்ளும்போது, உலகத்தின் எவ்வித அழிவிற்கும், கொள்ளை நோய்க்கும், பிசாசின் சோதனைகளுக்கும் நாம் தப்பித்துக்கொள்ள முடியும்.
நாம் இந்த வருடம் முழுவதும் எவ்வளவு நேரம் ஜெபத்தில் தரித்திருந்தோம் என்று பார்த்தோமானால், அது எத்தனை குறைவாய் காணப்படும்? ஒருவர் எழுதினார், “ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் ஜெபித்தால் ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு நாளைக்குத்தான் ஜெபித்திருப்போம்” என்று. ஒவ்வொரு உலக காரியத்திற்கும் மணிக்கணக்கில் செலவழிக்கிற நாம் ஜெபத்திற்கு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம்? நமது ஜெபத்தைப் பொறுத்துத்தான் நாம் உலகத்தின் மீது ஜெயம் கொள்வது அமையும். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் கூட ஜெபிக்காமல் இருந்தால் எப்படி நாம் சாத்தானை ஜெயிக்க முடியும்? நாம் நம்மையே ஒரு விசை ஆராய்ந்து, ஜெபிப்பதற்கு நம்மை ஒப்புக்கொடுப்போமா?
-Bro. ஹனீஷ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
நமது கெத்செமனே வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளில் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250