By Village Missionary Movement
Friday, 05-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 05.09.2025
தெளிவாகயிருக்க வேண்டும்
"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்..." - 1 பேதுரு 5:8
இளைஞன் ஒருவன் ஞானி ஒருவரைப் பார்த்து கேள்வி ஒன்றை கேட்டான், "கடவுளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று. 'ஆம்' என்ற அவரிடம், நான் கடவுளை பார்க்க முடியுமா? என்றான். அதற்கு அவர் உன்னால் பார்க்க முடியாது என்றார். ஏன்? என்றான் இளைஞன், ஞானி பதில் ஏதும் சொல்லவில்லை. அவனை ஒரு குளத்தங்கரைக்கு அழைத்துச் சென்றார். தண்ணீரை ஒரு கலக்கு கலக்கி இப்போது இந்த நீரில் குனிந்து பார், உன் முகம் உனக்கு தெரிகிறதா? என்று கேட்டார். இல்லை என்றான் இளைஞன். அவரிடம் ஏன் தெரியவில்லை என்றான் இளைஞன். அவனுக்கு அதற்கான தகுந்த காரணங்களை கூறி விளக்கி காண்பித்து, நாம் எப்போது கடவுளை பார்க்க முடியும் என்று கற்றுக்கொடுத்தார்.
எனக்கருமையான தேவமக்களே! இயேசுவை மற்றவர்களுக்கு காண்பிக்கவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். குழம்பிய மனதுடனும் தெளிவற்ற சிந்தைகளுடனும் காணப்பட்டால், நம்மால் மற்றவர்களுக்கு இயேசுவை காண்பிக்க முடியாது. அது எப்படி என்றால் தண்ணீர் கலங்கிய உடன் அவனது முகம் தண்ணீரில் தெரியாதது போல, நாம் குழப்பமுடையவர்களாக காணப்படும் போது நம்மால் இயேசுவை மற்றவர்களுக்கு காண்பிக்க முடியாது. இயேசுவை பிறருக்கு எப்பொழுது நாம் காண்பிக்க முடியும்? நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கும் போது பிறருக்கு இயேசுவை காண்பிக்க முடியும்.
அதனால் தான் எபிரெய ஆக்கியோன் 12:1 ல் சொல்கிறார், "பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறவர்கள் எப்படி பாரமான ஆடைகளை அகற்றி, வேகமாக ஓடுவதற்கு ஏதுவான ஆடைகளை அணிந்து ஆயத்தமாக ஓடுகிறார்களோ அது போலவே நம் பாரமான இருதயத்தையும், பாவம் நிறைந்த சிந்தையையும் நம்மைவிட்டு அகற்றி விடுவோமானால், இயேசுவை மற்றவர்களுக்கு தெளிவாக காண்பிக்க முடியும். நாம் தெளிவான மனதுடனும், புத்தியுடனும் இருந்தால் இயேசுவை இவ்வுலகிற்கு காண்பிக்க முடியும். இது குறித்து இயேசு கிறிஸ்து கூறும் போது, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்". ஆம், உலகத்தால் கறைபடாத, உலக ஆசையால் ஈர்க்கப்பட்டு குழம்புகிற இருதயம் இல்லாமல் சுத்தமாய், நம் இருதயம் இருக்கும் போது நாம் ஆண்டவரை தரிசிக்கலாம். நம் இருதயம் சுத்தமாயும், நம் சிந்தனை தெளிவுள்ளதாகவும் உள்ளதா?
- Mrs. எப்சிபா இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:-
எழுப்புதல் வாலிபர் முகாம் அன்று வேதாகமம் பெற்று சென்ற நபர்கள் தொடர்ந்து வாசித்து அதில் நிலை நிற்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864