By Village Missionary Movement
Thursday, 04-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 04.09.2025
பொய் சொல்லாதீர்கள்
"நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனை பண்ணாமலும், ஒருவருக்கொருவர்
பொய் சொல்லாமலும் இருங்கள்" - லேவி. 19:11
மதுரம் என்பவருக்கு இரண்டு பையன்கள் இருந்தார்கள். அவருக்கு ஆற்றங்கரையோரமாக ஐந்து ஏக்கர் நிலமும், கல் பூமியாக ஐந்து ஏக்கர் நிலமும் இருந்தது. ஆற்றங்கரையோரமாக இருந்த நிலம் நன்றாக விளைந்தது, அதிகமான பலன்கள் கொடுத்தது. ஆனால் கல் பூமியாக இருந்த நிலத்தில் ஒரு விவசாயமும் செய்ய முடியவில்லை. திடீரென ஒரு நாள் மதுரம் வியாதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மகன்களும் மாறி மாறி மருத்துவமனைக்கு வந்து தங்களது தகப்பனாரை கவனித்துக் கொண்டார்கள். ஆனால் அவரின் உடல்நிலையோ மிகவும் மோசமாகிவிட்டது. அப்பொழுது தன் கூட இருந்த மூத்த மகனிடம், நீயும் உன் சகோதரனும் எவ்வித சண்டை சச்சரவில்லாமல் ஆற்றங்கரையில் உள்ள நிலத்தையும், கல் பூமியையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லி மரித்து விட்டார்.
அவரின் இளைய மகன் ஆஸ்பத்திரியில் இருந்த மகனிடம், அப்பா என்ன சொல்லிவிட்டு இறந்தார் என்று கேட்டான். அதற்கு அவன் என்னை ஆற்றங் கரையோரமாக இருக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொள் என்றும், அந்த கல் பூமியை உனக்கு கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார் என்றான். தகப்பனின் வார்த்தையை அந்த மகன் கனப்படுத்தி கல் பூமியை சரிப்படுத்த ஆரம்பித்தான். கற்களை வெட்டி எடுத்து சரி செய்ய முற்படும்போது, கற்கள் பளபளவென்று மின்ன ஆரம்பித்தது. உடனே அதை தன் நண்பனிடம் காட்டினான். நண்பன் இது விலையேறப்பெற்ற கிரானைட் கற்கள் என்றான். அங்கு தொழிற்சாலை ஒன்றை அமைத்து, கற்களை ஏற்றுமதி செய்து செல்வ சீமானாக மாறினான். அவனை ஏமாற்றிய அண்ணன், தான் தம்பியை ஏமாற்றியதற்காக மனம் வருந்தினான்.
மேலே கண்ட வசனம் என்ன சொல்கிறது? ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள் என்று. மூத்தவன், தம்பியை ஏமாற்றி விடலாம் என்று பொய் சொன்னான். ஆனால் உண்மையில் ஏமாற்றப்பட்டது யார்? அண்ணனே. ஏன் கொஞ்ச காலத்தில் அந்த ஆற்றோரம் பூமி காய்ந்த பூமியாக மாறிப்போயிற்று. தம்பி செல்வ சீமானாக இருந்தான். ஆனால் அண்ணனோ ஏழையாக மாறினான். வேதத்திலே, பொய் சொல்லி தங்கள் வாழ்வையே அழித்துக் கொண்ட அனனியா சப்பீராள் தம்பதியைக் குறித்து நாம் அறிவோம். அவர்கள் நாம் ஏமாற்றுவது பேதுருவுக்கு தெரியாது என்று நினைத்தார்கள். ஆனால் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டனர்.
எச்சரிக்கை! ஏமாற்றாதீர்கள். நாமும் ஒரு நாள் ஏமாற்றப்படுவோம். "பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருக்கும்" (நீதி. 21:6). இயேசுவின் மேல் உங்கள் நம்பிக்கையை வையுங்கள். ஏற்ற காலத்தில் இயேசு உங்களை உயர்த்துவார். எனவே பொய் சொல்லாமலும், பிறரை ஏமாற்றாமலும் இருப்போமாக. இயேசு நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென். அல்லேலூயா!
- Rev.S. A.இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:-
எழுப்புதல் வாலிபர் முகாமில் பங்குபெற்றவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அபிஷேகத்தை காத்துக் கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864