By Village Missionary Movement
Thursday, 28-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 28.08.2025
பண ஆசை
"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;.." - 1 தீமோ. 6:10
பத்தாயிரம் ரூபாய் கட்டி சேர்ந்தால் ஒரு வருடம் கழித்து ஐம்பதாயிரம் ரூபாய் தருவோம் என்கிற "மார்க்கெட்டிங்" பண வியாபாரம் இந்த நாட்களில் பெருகி வருகிறது. இதனால் பணத்தை அநேகர் இழந்து விடுகின்றனர். அது மட்டுமல்லாது சிலர் பணத்தை இழந்து தற்கொலையும் கூட செய்து விடுகின்றனர். யோசித்துப் பாருங்கள் நம்முடைய உழைப்பு இல்லாமல், நம்மிடம் பல மடங்காய் வருகின்ற பணம் அது நிச்சயமாய் யாரோ ஒருவருடையதாகத்தான் இருக்க வேண்டும். பிறர் பொருளை இச்சியாதே என்று வேதம் சொல்லுகிறது.
பண ஆசை என்று சொன்னவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது அனனியா-சப்பீராள் என்ற தம்பதியினர். இவர்கள் தங்களுடைய காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, ஒரு பங்கை கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். பேதுரு அனனியாவை நோக்கி, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லும் படி சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங் கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னாய் என்றார். அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். வாலிபர் எழுந்து, அனனியாவை அடக்கம் பண்ணினார்கள். அனனியாவின் மனைவியும் தேவ மனிதரிடம் நிலத்தை இவ்வளவுக்குத் தான் விற்றோம் என்று பொய் சொன்னதினால் அவளும் விழுந்து ஜீவனை விட்டாள். இதைக்கண்ட யாவருக்கும் மிகுந்த பயம் உண்டாயிற்று.
இதை வாசிக்கின்றதான தேவ ஜனமே, பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என வேதம் எச்சரிக்கிறது. பண ஆசையினால் ஒரு குடும்பமே உயிரிழந்தது. மேலும் பண ஆசையினால் கேயாசிக்கு குஷ்டரோகம் வந்தது. யூதாஸ் தன் ஸ்தானத்தை இழந்ததும் பணஆசையில் தானே ! முறையான வழியில் பணம் சம்பாதிப்பது ஆசீர்வாதம். ஆனால் பேராசை நம்மை மேற்கொள்ளாமல் காத்துக் கொள்வது மிகவும் அவசியம். பணமோ எல்லாவற்றிற்கும் உதவும் என வேதத்தில் வாசிக்கிறோம். இது உண்மைதான், ஆனால் அளவுக்கு மீறி பணத்தின் மீது ஆசை வைப்பதோ, நம்பிக்கை வைப்பதோ கூடாது. நம்மிடமுள்ள பணமே நமக்கு போதும் என்ற மன நிறைவோடு வாழ தேவ ஒத்தாசையை நாட வேண்டும். நாம் இப்படிப்பட்ட நல்ல தீர்மானத்தோடு வாழும்போது நமக்கு தேவையான பணத்தை, தேவையான நேரங்களில் நமக்கு தர தேவன் வல்லவராயிருக்கிறார். போதுமென்ற மனதுடன் திருப்தியாய் வாழக் கற்றுக் கொண்டோமானால், அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம். இந்த ஆசீர்வாதத்தை நாம் ஒவ்வொருவரும் பெற்று வாழ்வோமாக!
- P. சிவா
ஜெபக்குறிப்பு:-
டி.வியில் "இயேசுவின் சந்ததி" நிகழ்ச்சியைப் பார்க்கிறவர்கள் இயேசுவின் சந்ததியாய் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864