By Village Missionary Movement
Wednesday, 27-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 27.08.2025
வேதத்தின் மகத்துவம்
"என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள்" - ஓசியா 8:12
ஒரு மருத்துவரின் தவறான சிகிச்சையினால் பிறந்து ஆறே வாரங்கள் நிரம்பிய ஃபேனி கிராஸ்பி தன் இரண்டு கண்களிலும் பார்வையை இழக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. சிறு வயதில் அவருடைய பாட்டி அவருக்கு அநேக காரியங்களை குறித்து சொல்லிக் கொடுத்தார். பூக்களை அவைகளின் நறுமணத்தை வைத்தே என்ன பூ என்றும், மரத்தை தடவிப் பார்த்து என்ன மரம் என்று கூறும் திறமை படைத்தவராயிருந்தார். சிறுவயதிலேயே வசனங்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தார். 5 ஆகமங்களையும், சங்கீதங்களையும், நீதிமொழிகளையும், ரூத் போன்ற வேத புத்தகங்களையும் அவர் மனனம் செய்து வைத்திருந்தார். அது அவருடைய ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறுவதற்கு அவருக்கு பெரிதும் உதவின.
பழைய ஏற்பாட்டில் எல்லாராலும் அதிகமாக விரும்பப்பட்டு, நேரம் ஒதுக்கி வாசிக்க கூடிய பகுதி சங்கீத புஸ்தகம் ஆகும். இந்த சங்கீதம் பெரியவர்கள் முதல் சிறுபிள்ளைகள் வரை என அனைவரும் விரும்பி வாசிக்கின்ற பகுதி. இதில் பெரும்பாலான பகுதி "சங்கீதக்காரன்" என்று சொல்லக்கூடிய தாவீதினால் எழுதப்பட்டது. தாவீது குறிப்பிடுகையில், 'வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர் என்றும், உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்' என்றும் எழுதியுள்ளார்.
அன்பான சகோதர, சகோதரிகளே! இன்று உலகிலேயே அதிகமாக அச்சிடக்கூடிய, அதிகமாக விற்பனையாகக்கூடிய ஒரே புத்தகம் வேதம் தான். இந்த வேதபுத்தகம் நம்முடைய தாய்மொழியில் நமக்கு கிடைப்பதற்கு பலர் இரத்த சாட்சியாக மரித்துள்ளனர். வேதத்தின் மகத்துவங்களை நாம் அறிந்திருந்தோம் என்றால் அதனை வாசிக்காமல் இருக்கவே முடியாது. ஜெபிக்கும் போது நாம் ஆண்டவருடன் பேசுகிறோம். வேதத்தை வாசிக்கும் போது ஆண்டவர் நம்முடன் பேசுகிறார். இதை வாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் புதிய ஜீவனையும், உற்சாகத்தையும் கொடுக்கக்கூடியது. தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை விட வேதத்திலுள்ள வசனங்கள் விலையேறப்பெற்றது. இந்த வேத வசனங்கள் பரிசுத்த ஆவியானவரால் நமக்கு எழுதிகொடுக்கப்பட்டுள்ளது. நமக்கு கண் பார்வை நன்றாக இருக்கக்கூடிய நாட்களில் வேதத்தை அதிகமாய் வாசிப்போம். பார்வையற்ற சிறுமி நூற்றுக்கணக்கான அதிகாரங்களை மனனம் செய்யமுடியுமென்றால் நம்மை குறித்து என்ன? நம் பிள்ளைகளுக்கு வேதத்தை வாசிக்க கற்றுக்கொடுப்போம். வேதத்தை தியானிப்பதில் அதிக நேரம் செலவிடுவோம், ஏனென்றால் வசனம் கிடைக்காத பஞ்சகாலம் வரும். எனவே வேதத்தை நேசிப்போம், வாசிப்போம். நம்முடைய வாழ்வில் அதை அப்பியாசிப்போம். நம்முடைய இருதயம் ஆண்டவருடைய வார்த்தையினால் நிரம்பி இருக்கும் போது, நாம் பேசுகின்ற வார்த்தைகளிலும் வல்லமை வெளிப்படும். பிறருடைய காயங்களையும் கட்டக்கூடியதாகவும் இருக்கும்.
- J.P. ஹெப்சிபா
ஜெபக்குறிப்பு:-
நம் டி.வி. நிகழ்ச்சிகள் மூலம் பலர் விசுவாசத்தில் பலப்பட, தேவனுக்காக செயல்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864