By Village Missionary Movement
Tuesday, 26-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 26.08.2025
தேவனின் குடும்பம்
"...மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" - எபேசியர் 5:31
சேகர்-மாலா என்ற தம்பதியினர் ஒரு நகரத்தில் வசித்து வந்தனர். இவர்களில் சேகர் ஒரு முதுநிலைப் பட்டதாரி. கிராம சூழ்நிலையில் வாழ்ந்து, அருகிலுள்ள கல்லூரியில் படித்தவர். தற்போது வங்கியில் வேலை பார்த்து நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி மாலா நகரத்தில் படித்து வளர்ந்ததால் மாலாவின் உடை, நடை, சரளமாய் ஆங்கிலம் பேசுவது என எல்லாவற்றையும் பார்த்த சேகரின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை, மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. மாலா எதைச் செய்தாலும் அதில் குறைகளை கண்டுபிடிப்பார் சேகர். இவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல யோசனை தோன்றியது. அதன்படி ஒரு ஆலோசகரிடம் சென்று தங்களுடைய சமாதானக் குறைவிற்கான காரணங்களை பகிர்ந்து கொண்டு, அதற்கான தீர்வையும் கண்டுபிடித்தனர். அதன் பின்பு தாழ்வு மனப்பான்மையின் அபாயத்தையும், மாலாவின் உண்மையான அன்பையும் சேகர் புரிந்து கொண்ட போது தான், அவர்களது வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டு ஆனந்தமாய் வாழ்ந்தனர்.
ஆதியிலே தேவன் எல்லா படைப்புகளையும் உண்டாக்கினார். தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான். பின்பு தேவனாகிய கர்த்தர் மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்றத் துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். அதன்படி மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்ற வார்த்தையின்படி கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, தேவ நியமத்தின்படி ஒரு பக்தியுள்ள சந்ததியை உலகத்தில் உருவாக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
மோட்சப் பயணம் வாசகர்களே! நமது குடும்பங்களில் தாழ்வு மனப்பான்மை பல காரணங்களினால் ஏற்படலாம். கல்வி, பெற்றோரின் பதவி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமுதாய அந்தஸ்து, தம்பதிகளுக்கிடையே உயரம், நிறம், பருமன், அங்கவீனங்கள், ஊதிய வித்தியாசம் என பல காரணங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். நமக்கு எதிராளியானவன் தாழ்வு மனப்பான்மையை நம்மிடையே உண்டாக்குவான். நாமோ, இப்படிப்பட்டதான காரியங்களுக்கு இடங்கொடாமல், தேவ சமுகத்தில் அனுதினமும் ஜெபித்து, நம்மை சரி செய்து கொள்வோம். அநேக குடும்பங்களில் பிரிவினைக்கு முக்கிய காரணம் மன்னிக்க முடியாமை, விட்டுக்கொடுத்தல் இல்லாமை. கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட நாம், ஒருவருக்கொருவர் மன்னித்து, விட்டுக் கொடுத்து, நேசித்து வாழ்வோமென்றால் "இயேசுவின் குடும்பம்" என்று சாட்சி பெறுவோம்.
- Mrs. ஞானசெல்வம் செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
மீடியாவில் பணி செய்வதற்கு படித்த, திறமையான அர்ப்பணிக்கப்பட்ட வாலிபர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864