By Village Missionary Movement
Friday, 22-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 22.08.2025
ஜீவகிரீடம் பெற
"…நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்;…" – 2 தீமோ. 4:8
ருமேனியா நாட்டில் ரிச்சர்ட் உம்பிராண்ட் என்ற தேவ ஊழியர் கர்த்தருடைய வேலையை செய்து கர்த்தருக்காய் வைராக்கியமாய் வாழ்ந்து வந்தார். தேவனுடைய வேலையை செய்ததினிமித்தம் அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. சொல்லி முடியாத துன்பங்களை சிறையில் அனுபவித்தார். இரும்பு கம்பிகளால் அவருடைய உடலை துளைத்தனர். இருட்டு அறையில் அடைத்து பலவாறு பேசி அவரை மூளைச்சலவை செய்தனர். சரியான உணவு கொடுக்காமல் துன்பப்படுத்தினர். இச்சூழ்நிலையில் அவரின் மனைவியையும் சிறையில் அடைத்தனர். அவருடைய ஒரே மகன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தனித்து விடப்பட்டான். ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய அன்பை விட்டு பின் வாங்கவில்லை. கிறிஸ்துவின் அன்பு ரிச்சர்ட் உம்பிராண்டின் இருதயத்தை நிறைத்தது. தேவ ஆவியானவர் அவரை முழுவதுமாய் ஆட்கொண்டார். அநேக சித்திரவதைகள், உபத்திரவங்கள், பாடுகள், பசி, பட்டினி, தனிமை என எதுவும் அவரை கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிக்க முடியவில்லை. "கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம்", என்று வைராக்கியமாய் நின்றார். கிறிஸ்துவை மறுதலிக்காமல் ஆண்டவருக்காய் உறுதியாய் இருந்ததைப் பார்த்து அவ்வரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாமல் அவரை விடுதலை செய்தது. சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்த அவர் ஆண்டவருக்காய் அநேக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணினார். மகிமையாய் தன்னுடைய ஓட்டத்தை முடித்து என்றென்றுமுள்ள வாடாத ஜீவகிரீடத்தைப் பெற்றார்.
அப்போஸ்தலனாகிய பவுலும் சத்தியத்தின் நிமித்தம் வைராக்கியமாய் வாழ்ந்து பல பாடுகள்,உபத்திரவங்கள், கட்டுகள், நாசமோசங்கள், அடிகள், சிறைச்சாலை அனுபவங்கள் போன்றவற்றை ஏற்றவர். அதன் மத்தியிலும் தேவனுடைய வார்த்தையை சொல்லுவதற்காக அதிகமாக பிரயாசப்பட்டவர். பவுல் இப்படியாக சொல்கிறார் "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்." (2 தீமோ.4:7)
பிரியமானவர்களே! நாமும் எப்பொழுதும் இயேசு கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டு, தேவ ஆவியானவரோடு இணைந்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம், பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுவோம். பவுல் சொல்லுகிறது போல அழிந்து போகிற ஆத்துமாக்களுக்காய் திறப்பில் நிற்போம். தேவன் நமக்கு வைத்திருக்கிற ஓட்டத்தில் ஜெயமுடன் ஓடி முடித்து நமக்குரிய ஜீவ கிரீடத்தை பெற்றுக் கொள்வோம்.
- Mrs. ஷீலா ஜான்
ஜெபக்குறிப்பு:-
மிஷனெரி இல்லங்களை கட்டித்தரும் சூனேமியாக்கள் எழும்ப ஜெபியுங்கள்..
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864