By Village Missionary Movement
Thursday, 21-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 21.08.2025
இரக்கமுள்ள கண்கள்
"...அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி..." - மாற்கு 6:34
ஒரு மனிதன், பனியால் மூடப்பட்ட ஆற்றைக் கடந்து தன் வீட்டிற்குச் செல்ல வழி தெரியாமல், பனியில் சிக்கி, இறக்கும் தருவாயில் இருந்தான். அந்நேரத்தில் குதிரையில் ஒரு பெரிய குழு வேகமாக வந்ததைக் கண்டான். ஆனால் அவன் கடைசி குதிரைவீரன் வரும் வரை காத்திருந்து ஆற்றைக் கடக்க உதவி கேட்டான். குதிரைவீரன் அந்த மனிதனை தனது குதிரையில் ஏற்றி, முழங்கால்வரை தண்ணீருள்ள ஆற்றைக் கடந்து சென்றது மட்டுமல்லாமல், ஆற்றுக்கு அப்பால் சில மைல்கள் தொலைவில் இருந்த அவனது வீட்டிற்கும் அழைத்துச் சென்றான்.
குதிரைவீரன் அவனிடம் ஏன் மற்ற குதிரை வீரர்களிடம் உதவி கேட்கவில்லை என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன் உங்கள் ஒவ்வொருவரின் கண்களையும் பார்த்தேன். ஆனால் உங்கள் கண்களில் மட்டுமே ஒரு அக்கறையுள்ள இதயத்தைக் காண முடிந்தது என்றான். அன்று இரவு, ஆற்றைக் கடந்து தன்னை அழைத்துச் சென்ற அந்த குதிரைவீரன் தான் அமெரிக்காவின் ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன், என்பதை அம் மனிதன் அறிந்திருக்கவில்லை.
ஆம், சில கடினமான சூழ்நிலைகள் நம்மையும் நம்முடன் இருப்பவர்களையும் அடையாளப்படுத்தி விடுகிறது. யோவான் ஸ்நானனுக்கும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குமான பிறப்பின் கால இடைவெளி ஆறு மாதம் மட்டுமே. யோவான் இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துகிறவனாகவும் , எரிந்து பிரகாசிக்கும் விளக்காகவும் இருந்தார். இத்தகைய சூழலில் ஏரோதின் ஜென்ம நாளில் யோவான் ஸ்நானனின் தலை வெட்டப்பட்டது என்பதை அவர் அறிந்தும், இயேசுவானவர் தனித்து வனாந்தரமான ஒரு இடத்திற்கு தம்முடைய சீஷர்களுடன் செல்கிறார். இந்நிலையில் அவர் இருக்கும் இடத்திற்கு முன்பாக திரளான ஜனங்கள் வருகிறார்கள். இயேசு அநேக ஜனங்களைக் கண்டு அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள் போல் இருந்தபடியால் அவர்கள் மேல் மனதுருகி, அநேக காரியங்களை உபதேசித்து, அநேக வியாதியஸ்தர்களை அவர் கண்டபோது மனதுருகி அவர்களை சொஸ்தமாக்கினார். சூழ்நிலை எவ்வளவு கடினமாயிருந்தாலும், தேவையுள்ள ஜனங்களை பார்க்கும் போது இரக்கமுள்ளவராய் இயேசு கிறிஸ்து செயல்பட்டார்.
கிறிஸ்துவை அறிந்ததான தேவ ஜனமே! உங்களுடைய கண்கள் எப்படிப்பட்டதாயிருக்கிறது? அந்த கண்களில் இரக்கம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இயலாதவர்கள் அநேகர் இவ்வுலகில் உண்டே. துன்பத்தில் வாடும் உங்கள் சகோதர சகோதரிகளை நினைவு கூருங்கள். திக்கற்றவர்களையும், ஏழை எளியவர்களையும் மறவாதீர்கள். இயேசு கிறிஸ்துவிற்குரிய அந்த மனதுருக்கம் உங்களிலும், உங்கள் கண்களிலும் இருப்பதை அநேகர் காணட்டும். நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும் என்பதை அறிந்தவர்களாய், கிறிஸ்துவின் சாயல் உங்களில் வெளிப்படட்டுமே. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார்.
- R. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:-
நம்மோடு இணைந்து பணிசெய்யும் சுவிசேஷகர்கள், பகுதிநேர மிஷனெரிகளை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864