By Village Missionary Movement
Tuesday, 19-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 19.08.2025
தாழ்மை
"கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்" - யாக்கோபு 4:10
மிகச்சிறந்த படிப்பாளரான Booker T. washington என்பவர் Hampton institute, Virginia ல் சேருவதற்காக நேர்முகத்தேர்வுக்குச் சென்றிருந்தார். பிரசித்தி பெற்ற அந்த இன்ஸ்டிடியூட்டில் இடம் கிடைப்பது மிகவும் அரிது. அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை அங்குள்ள வகுப்பறையை கழுவி விட்டு, அங்கிருந்த பெஞ்சுகளையும் துடைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போனார்கள். அவர்கள் பாடம் சம்பந்தமான கேள்வியை கேட்பார்கள் என எதிர்பார்த்ததினால், இந்த வேலையை சொல்லுகிறார்களே என்ற வருத்தம் அவருக்கு வந்தாலும், வேறு வழியில்லாமல் அதை செய்ய ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த தலைமை ஆசிரியை, எல்லா பெஞ்சுகளையும் உன் கை குட்டையால் துடைத்து சிறப்பான காரியத்தை செய்தாய் என்று அவரை பாராட்டி, அவருக்கு அங்கு ஒரு இடத்தை கொடுத்தார்களாம். அந்த தலைமை ஆசிரியை செய்த செயல் அவர் வாழ்க்கையையே மாற்றிற்று என அவர் தனது புத்தகத்தில் இதை எழுதியுள்ளார்.
இந்த சம்பவத்தைப் போலவே, வேதத்திலும் ஒரு சம்பவம் எழுதப்பட்டுள்ளது. பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். வானம் எனக்கு சிங்காசனம், பூமி எனக்கு பாதபடி என்று சொல்கிறதான அவ்வளவு மகத்துவமான ஆண்டவர். வானத்தையும், பூமியையும் தம்முடைய வார்த்தையினால் படைத்த படைப்பின் காரணர், சீஷருடைய கால்களைக் கழுவி தம்முடைய தாழ்மையை வெளிப்படுத்தினார். அது மாத்திரமல்ல, தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் செய்தார். என்னே ஒரு தாழ்மை!
எனக்கு அன்பானவர்களே! நம்முடைய ஆண்டவர் எதையும் அவர் செய்து காண்பியாமல் நம்மை செய்ய வேண்டுமென நிர்ப்பந்திக்கிற தேவனல்ல. அவர் தம்முடைய சீஷரின் கால்களைக் கழுவி, தாழ்மையை வெளிப்படுத்தினதின் நிமித்தம் நம்மிடமும் தாழ்மையை எதிர்ப்பார்க்கிறார். தாழ்மை என்பது நம்முடைய சிந்தையை நிரப்பி கிரியைகளில் வெளிப்பட வேண்டும். இன்றும் வடஇந்திய பகுதிகளில் அநேகர் தங்களுடைய வீட்டிற்கு வரும் உறவினர்களின் கால்களைக் கழுவியும், துடைத்தும் வரவேற்கின்றனர். காரணம் நீங்கள் என்னிலும் மேலானவர்கள், உங்களை நாங்கள் இவ்வளவாய் மதிக்கிறோம் என்பதை காண்பிப்பதற்காகவே அவ்வாறு செய்கின்றனர். ஆண்டவரிடமிருந்து கிருபைகளை பெற்றுக்கொள்வதற்கு தாழ்மை மிகவும் அவசியம். கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுவோம். அப்போது அவர் நம்மை உயர்த்துவார். தாழ்மையாயிருந்து அவருடைய கிருபையை பெற வாஞ்சிப்போம்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
முகாமில் வாலிபர்கள் எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் நிலைத்து நிற்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864