By Village Missionary Movement
Monday, 18-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 18.08.2025
இரட்சிப்பின் வழி
"...அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,..." - யோவான் 1:12
ஒரு முறை பில்லி கிரஹாம் அவர்கள் இரட்சிப்பைக் குறித்து ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினார். அவர் சொன்னது, "அநேகர் நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், சபைக்கு வருவதை விட்டு விடாமல் இருக்கிறேன், இது போதாதா நான் பரலோகம் போவதற்கு" என்று வாதிடுகிறார்கள். இல்லை, இது ஒருபோதும் போதாது. இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒருவன் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டுமென்று மிகவும் உயர்ரக விமானத்தில் டிக்கெட் வாங்கி, குறிப்பிட்ட நேரத்திற்கு விமான நிலையத்திற்கும் போய் சேர்ந்துவிட்டான். விமானம் புறப்படவேண்டிய சில நிமிடங்களுக்கு முன் அவனுடைய பெயரை சொல்லி கூப்பிடுகிறார்கள். ஆனால் அவனோ விமானத்தில் ஏறாமல் காலம் தாழ்த்தினால், விமானத்தின் கதவு மூடப்பட்டு விடும். விமானம் ஓடு தளத்தில் ஓடி, உயரே எழும்பி பறக்க ஆரம்பித்து விடும். அந்த மனிதன் அந்த விமானத்தின் மேல் அது தன்னை உரிய இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தான். எல்லாமே தயாராக இருந்தும், அவன் அதில் ஏறாத படியினால் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியாமல் போனது. ஆம், கிறிஸ்தவ பெயரோடு ஆலயம், வேதாகமம், பரலோகம், நரகம் என எல்லாம் அறிந்திருந்தும் இயேசுவை தன் தனிப்பட்ட வாழ்வில் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பரலோகம் சாத்தியமில்லை.
யோவான் எழுதின சுவிசேஷத்தில் அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என வாசிக்கிறோம். இயேசுவை ஏற்றுக் கொண்ட அத்தனை பேர்களும் இயேசுவின் பிள்ளைகள் என்பது மாத்திரமல்ல, அவர்கள் இரட்சிக்கப்பட்டு, பரலோக வாசிகள் என்னும் உரிமத்தை பெற்றுள்ளனர்.
பிரியமானவர்களே! இயேசுவை அறிந்திருக்கிறேன், அவருடைய வேத புத்தகத்திலுள்ள வசனங்களை தினமும் தியானிக்கிறேன், ஆலயத்திற்கு ஒழுங்காகச் செல்வேன் என்று சொல்வது சாத்தியப்படாது. கர்த்தராகிய இயேசுவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டால், அவர் தமது இரத்தத்தினால் நம்மை கழுவி, சுத்திகரித்து அவருடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்வார். நாம் அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டால் மாத்திரமே இரட்சிப்பின் வழியை கண்டடைவோம். இயேசுவை ஏற்றுக் கொண்டு அவருடைய பிள்ளையாகி, இரட்சிப்பின் வழியைப் பற்றி தெரியாதவர்களுக்கு அதை அறிவித்திட, நம் ஒவ்வொருவரையும் இயேசுவானவர் அழைக்கிறார். இயேசுவிடம் வருவோம். இரட்சிப்பின் வழியை கண்டடைவோம். பிறருக்கு அதை பறைசாற்றுவோம், அதை இன்றே செய்ய முற்படுவோம்.
- Bro. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
முகாமில் புதிதாக அபிஷேகம் பெற்றுக்கொண்டவர்கள் ஒவ்வொரு நாளும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864