By Village Missionary Movement
Thursday, 14-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 14.08.2025
இயேசுவே பதில்
"...நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்” - தானியேல் 3:25
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெரிய அறிவியல் அறிஞரின் கார் ஓட்டுநர் ஐன்ஸ்டீனிடம், நான் உங்களது சொற்பொழிவை அடிக்கடி கேட்டதினால் நான் இப்போது உங்களது கருத்துக்களை அழகாகக் கூறுவேன் என்று கூறினார். அந்தக் காலத்தில் இப்போது இருப்பது போல TV, internet connection, எதுவும் இல்லாததினால் ஐன்ஸ்டீனை நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே. எனவே ஐன்ஸ்டீன், ஓட்டுநரிடம் நாம் இருவரும் ஆள்மாறாட்டம் செய்து கொள்வோம், இன்று எனக்கு பதிலாக நீ உரையாற்று என்று கூறினார். ஒத்துக்கொண்டு மேடை ஏறி ஓட்டுநர் சிறப்பாக உரையாற்றி முடித்து பெருமூச்சுடன் அமரவந்தவரிடம், "நாங்கள் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம்" என்றனர். அதில் ஓரிரு கேள்விக்கு பதிலளித்தார். பின் மிகவும் கடினமான கேள்வியைக் கேட்ட நபரைப் பார்த்து ஓட்டுநர், "நீங்கள் சிறந்த பேராசிரியர்தான் ஆனால், என் ஓட்டுநர் கூட பதிலளிக்கக் கூடிய எளிய கேள்வியைக் கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று சொல்லி இக்கட்டான நிலையிலிருந்து தப்பித்துவிட்டார். ஓட்டுநர் வேடத்தில் இருந்த ஐன்ஸ்டீன் அதற்கு பதில் அளித்தாராம்.
தானியேலின் மூன்று நண்பர்களும் இக்கட்டான தருணத்தில் சிக்கிக் கொண்டனர். தான் உருவாக்கிய பொற்சிலையை வணங்காவிட்டால் அவர்களை அக்கினிச் சூளையில் போடுவதாக ராஜா பயமுறுத்துகிறார். உங்களை என் கைக்குத் தப்புவிக்கிற தேவன் யார்? என்று கேட்கிறார். தானியேலின் நண்பர்கள் பணிந்து கொள்ள மறுத்ததினால் அக்கினிச் சூளையில் போடப்பட்டனர். ஆனால் இயேசு கிறிஸ்துவே ஒரு தூதனாக அவர்களோடு அக்கினியில் உலாவி, அவர்களை சேதமடையாமல் காத்து, ராஜாவின் கேள்விக்கு மறுக்க முடியாத வகையில் பதிலளித்தார்.
எனக்கருமையானவர்களே! நம் வாழ்விலும் சில நேரங்களில் சூழ்நிலைகள் கை மீறிப்போவதாக நாம் உணரலாம். எல்லாம் முடிந்தது இனி அவ்வளவுதான் என்று நினைக்கக்கூடிய சூழ்நிலைகள் கூட வரலாம். நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவர், அவர் விடுவிக்காமல் போனாலும் பொற்சிலையை வணங்கமாட்டோம் என்று அவர்கள் தேவனோடு நின்றார்கள். நம்மால் மேற்கொள்ள முடியாத பிரச்சனைகளில் இயேசு கிறிஸ்துவே நமக்காகப் பதில் அளிப்பார் என்ற விசுவாசத்துடன் இருக்க வேண்டும். அப்போது இவ்விதமாக இரட்சிக்கத்தக்கதான தேவன் வேறொருவரும் இல்லை என்று ராஜா தேவனை மகிமைப்படுத்தினது போல நம் மூலமாகவும் தேவன் மகிமைப்படுவார். சில நேரங்களில் அக்கினிஜூவாலை போன்ற சூழ்நிலைகள் வந்தாலும், அவரே நமக்கு பதிலாக இருப்பார். ஆமென்!
- Mrs. A. பியூலா
ஜெபக்குறிப்பு:-
முகாமிற்கு வருகிற ஒவ்வொரு வாலிபர்களும் தேவனுக்காக செயல்படுகிறவர்களாக மாற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864