By Village Missionary Movement
Thursday, 07-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 07.08.2025
புத்தியுள்ள கிறிஸ்தவர்கள்
"...ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?" - லூக்கா 6:46
யோவான் எழுதின சுவிசேஷத்தில் இயேசு, ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், என் வசனங்களைக் கைக்கொள்ளுவான். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான் என்று சொல்லிவிட்டார். நாம் யாரிடத்திலாவது அன்பாயிருந்தால் அவர்கள் சொல்லுகிறபடி நடப்போம். நாம் இயேசுவிடம் அன்பாயிருந்தால் அவர் சொல்லுகிறபடி செய்வோம். வேத வசனங்களின்படி நடந்தால் தேவ சித்தப்படி வாழ்ந்து தேவனுக்கு பிரியமானதை செய்வோம். அதனால் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைகிறோம். நாம் பரிசுத்தமடைவதே தேவனுடைய சித்தம். பரிசுத்தம் என்பது வாழ்நாள் முழுவதும் தினந்தோறும் பிரயாசப்பட வேண்டிய காரியம். எனவேதான், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று வேதம் கூறுகிறது.
தேவ சித்தம் செய்யாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. அப்படியென்றால் பெயர் கிறிஸ்தவர்களாக இருந்து, இயேசுவை, கர்த்தாவே! ஆண்டவரே! என்றெல்லாம் கூப்பிட்டுக் கொண்டிருப்பது பயனற்றது. வசனங்களுக்குக் கீழ்ப்படிந்து, தேவ சித்தம் என்ன என்று அறிந்து அதை நம் வாழ்வில் செய்வதே அதிமுக்கியமானது.
இயேசு கிறிஸ்து ஒரு உவமையிலே வேத வசனங்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களை தன் வீட்டை கற்பாறையின் மேல் அஸ்திபாரமிட்டு கட்டிய புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுகிறார். கற்பாறையின் மீது கட்டப்பட்ட வீட்டின் மீது பெருத்த நீரோட்டம் வந்து மோதினாலும் அழிக்க முடியாது. வேத வசனத்தின் படி வாழ்கிறவர்களை உலகத்தின் எந்த சோதனையும், பிரச்சனையும், போராட்டமும் தேவனை விட்டு பிரிக்க முடியாது. வேத வசனத்தின்படி வாழாதவர்களை இயேசு மணலின் மேல் அஸ்திபாரமிட்டு தன் வீட்டைக் கட்டிய புத்தியற்ற மனுஷனுக்கு ஒப்பிடுகிறார். அவர்கள் சோதனை, பிரச்சனை, பாடு, துன்பம் வரும் காலத்தில் தேவனை விட்டு எளிதாய் பின்வாங்கிப் போவார்கள். அவர்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.
பிரியமானவர்களே, இயேசுவை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கற்பனையை கைக்கொள்ளாதவர்கள் பொய்யர், அவர்களுக்குள் சத்தியமில்லை. அவருக்குள் நிலைத்திருக்கிறவர்கள் அவர் நடந்தபடியே நடக்க வேண்டும் என்று வேதம் இன்று நம்மை எச்சரிக்கிறது. இதை வாசிக்கும் யாரேனும் வசனத்திற்கு நடுங்குகிறவர்களாய், வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களாய் இருப்பீர்களென்றால் இன்றே உங்கள் வழியை சிந்தித்துப் பாருங்கள். வேத வசனங்களின்படி நடந்து தேவ ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ள பரிசுத்த ஆவியானவர் கிருபை செய்வாராக!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:-
செய்தி கொடுக்கும் தேவதாசர்களை காற்றுகளாகவும், அக்கினி ஜூவாலைகளாகவும் தேவன் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864