By Village Missionary Movement
Wednesday, 06-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 06.08.2025
வாழ்க்கையின் அர்த்தம்
"நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்;..." - எரேமியா 1:5
ஒரு காட்டில் விலங்குகளும், பறவைகளும் ஒரு மாநாடு நடத்தியது. "வாழ்க்கையின் அர்த்தம் என்ன?" என்பதுதான் விவாதத்தின் தலைப்பு. பாடுவதே வாழ்க்கை என்றது குயில். ஆடுவதே வாழ்க்கை என்றது மயில். ஓடுவதே வாழ்க்கை என்றது மான். தேடுவதே வாழ்க்கை என்றது தேனீ. கூடுவதே வாழ்க்கை என்றது காகம். சேர்ப்பதே வாழ்க்கை என்றது எறும்பு. ஏமாற்றுவதே வாழ்க்கை என்றது நரி. இவ்வாறு ஒவ்வொன்றும் ஒன்று சொல்ல, விவாதம் நீண்டு கொண்டேயிருந்தது. முடிவாக எல்லாம் ஒருமனப்பட்டு நாம் கடவுளிடம் கேட்போம் வாருங்கள், நடப்போம்... என்று கூறிக்கொண்டே இன்றுவரை நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அநேக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு யார் அர்த்தம் சொல்லி, அவர்களை தெளிவடையச் செய்வது? அது நம் மீது விழுந்த கடமையாக இருக்கிறது. அதற்காகவே தேவன் நம் ஒவ்வொருவரையும் தாயின் கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பாகவே தெரிந்து கொண்டார். வியாதி வந்ததால் சாவு நிச்சயம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, ஒரு தாயார் இயேசு கிறிஸ்து உன்னை வியாதிப்பட்டு சாவதற்காக உண்டாக்கவில்லை, நீ வியாதியிலிருந்து விடுதலையாகி, அநேக ஆண்டுகள் வாழவே உன்னை உண்டாக்கினார் என்றார். அப்பொழுது நான் வியாதி சாவதற்கு அல்ல, வியாதி நீங்கி பிழைப்பதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை அறிந்து கொண்டேன்.
சிலர் அனுதினமும் பல கஷ்ட நஷ்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் என் வாழ்க்கை கஷ்டத்திலேயே இருக்கிறது என்பதே. இல்லை பிரியமான ஜனமே, நம் கஷ்டம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள். ஆண்டவர் வியாதியஸ்தர்களையும், கடன் பாரங்களோடு கண்ணீர் வடித்தவர்களிடம், "என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கிறார். நம்முடைய வாழ்க்கை மாறின விதத்தை மற்றவர்களுக்கு அறிவிக்கும் போது, அவர்கள் தங்களது வாழ்க்கையின் அர்த்தத்தை ஆண்டவரும் இரட்சகருமான இயேசுவிடம் கேட்பார்கள். கண்டிப்பாக மனதுருக்கமுள்ள நம் ஆண்டவர் அவர்களது வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக மாற்றுவார்.
வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டு கொண்ட நாம் மவுனமாயிராமல் மற்றவர்களுக்கு அதை அறிவிப்போம். தாயின் கர்ப்பத்தில் நம்மை தெரிந்து கொண்டதற்கு காரணமே நாம் வாழ்க்கையின் அர்த்தத்தை காலதாமதம் செய்யாமல் பிறருக்கு அறிவிக்கவே. (2 கொரி. 6:2) ன் படி "இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்". இன்றைக்கே செய்ய வேண்டும், நாளை பார்ப்போம் என்று நினைக்காதிருப்போமாக. (நீதி. 27:1) ல் "...ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே". நாளை என்ன நடக்கும் என்றே தெரியாது. ஆதலால் கர்த்தருக்காக எதை செய்தாலும், அதை இன்றைக்கே செய்வோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
- Mrs. எப்சிபா இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:-
அபிநய நடனம், Skit, சாட்சி ஆகியவற்றின் மூலமாக அநேக வாலிப உள்ளங்கள் தொடப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864