By Village Missionary Movement
Saturday, 02-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 02.08.2025
அதிசய மரம்
"...நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்" - யோவான் 4:14
பாவோபாப் மரம் (Baobab Tree)- இது ஒரு அதிசய மரம். இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்றுதானே கேட்கிறீர்கள்? உயரம் என்று எடுத்துக் கொண்டால் 16 முதல் 98 அடி வரை இருக்கும். பேரதிசயம் என்னவென்றால் அடிமரத்தின் உட்பகுதி மூங்கில்போல் வெற்றிடம் கொண்டதாகவும், நீர் நிறைந்தும் இருக்கும். எவ்வளவு தண்ணீர் தெரியுமா? பெரியதோர் பாவோபாப் மரத்தின் கொள்ளளவு 1,20,000 லிட்டர்கள்! மேலும் கடும் கோடைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட ஆவியாக வெளியேறாதவாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். தண்ணீரில் வேறு பயனுள்ள சத்துக்களும் உண்டு. வறட்சிக் காலங்களில் மடகாஸ்கர் - ஆப்பிரிக்க நாட்டு ஏழை மக்கள் இதன் நீரைப் பருகிப் பயன்பெறுவர். மேல்மரம் காய்ந்துவிட்ட நிலையில் பல கிராமங்களில் அடிமரத்தை நீர்த்தேக்கத் தொட்டியாகப் பயன்படுத்துகின்றனர்.
இந்த மரத்தைப் போல தினமும் நித்திய ஜீவ ஊற்றாகிய, இயேசு கிறிஸ்துவாகிய ஜீவத்தண்ணீர், எப்பொழுதும் நமக்குள்ளே ஊறிக் கொண்டே இருக்க வேண்டுமென்றால், அதற்கு தினமும் வேதத்தை வாசிக்க வேண்டும். அவருடைய வார்த்தைகளை தியானிக்க வேண்டும். தினமும் ஆண்டவரோடு இருக்கிற உறவில் நிலைத்து இருந்து, இந்த மரத்தில் இருக்கிற வேர்கள் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதை போல நாமும் தினமும் வேதத்தின் வார்த்தைகளை உறிஞ்சி எடுக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். அப்படி காணப்படுவோமானால் பரிசுத்த ஆவியானவர் நம்மை நிரப்புவார். இந்த மரத்திலுள்ள தண்ணீர் எப்படி அநேகருடைய தாகத்தை தீர்க்கிறதாய் காணப்படுகிறதோ, அதைப்போல நாமும் அநேகருடைய தாகத்தை தீர்க்கிறவர்களாய் காணப்படுவோம்.
இஸ்ரவேல் ஜனங்கள் தாகத்தோடு இருந்தபோது தேவன் எப்படி கன்மலையை பிளந்து தண்ணீரை கொடுத்தாரோ, அதே போல கன்மலையாகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து ஜீவத்தண்ணீரை பருகுகிற நம்மிடத்திலுமிருந்து ஜீவ ஊற்று புறப்படும். அது அநேகருடைய தாகத்தைத் தீர்க்கும். ஆகவே தான் இயேசு கிறிஸ்து கூறும் போது "நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்." எனவே எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவர்களாக காணப்படுவோம். நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க பிரயாசப்படுவோம். தாகத்தோடு இருக்கிற ஜனங்களுக்கு ஜீவத்தண்ணீராகிய இயேசு கிறிஸ்துவை பருக கொடுப்போம். மற்றவர்களுக்கு சுவிசேஷம் சென்றடைய நம்மால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்வோம், அதற்காக ஜெபிப்போம். வேலை பார்த்துக்கொண்டும் ஊழியம் செய்யலாம். நம் நண்பர்கள் மத்தியில், நம்மோடு வேலை பார்க்கிறவர்கள் மத்தியில் எப்படியாவது ஜீவ நீரூற்றாகிய இயேசு கிறிஸ்துவை பகிர்ந்து கொடுப்போம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.
- P.V. வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:-
எழுப்புதல் வாலிபர் முகாம், வீட்டு ஜெபக்கூட்டங்களில் பங்கு பெற்று இம்முகாமிற்காக செயல்பட முடிவெடுத்தவர்கள் செயல்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864