By Village Missionary Movement
Saturday, 29-May-2021இன்றைய தியானம்(Tamil) 29-05-2021
ஒரு கனியும் இல்லையே
“…இதோ, மூன்று வருஷமாய்… கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை…” -லூக்கா 13:7
90-களில் இருந்த கல்விமுறையும் மாணவர்களின் மனநிலையும் இப்போது ஞாபகம் வருகிறது. வருடம் முழுவதும் படித்த படிப்பிற்கு தேர்வு வைப்பார்கள். அதிலும் பாருங்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் 35 மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் நாம் படித்த அதே வகுப்பறையில் அதே ஆசிரியரின் முன்பு மீண்டும் ஒரு ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும். அது ஒரு கடினமான காலமாகும். 35 மதிப்பெண்கள் எடுத்து முழு ஆண்டுத் தேர்வில் வெற்றி பெறாவிட்டால், இரண்டு அல்லது மூன்று வருடங்கள் என்று அதே வகுப்பில் படிக்கும் நிலை தொடரும், கூட இருக்கும் சக மாணவர்களையும் பெயில் ஆன மாணவனோடு பழக விடமாட்டார்கள். பழகினால் கெட்டுப் போய்விடுவார்கள் என்று! 35 மதிப்பெண்கள் எடுக்காவிட்டால் வீட்டிலும் பதில் சொல்லி மாளாது. இரண்டு மூன்று வருடம் ஒரே வகுப்பறையில் மீண்டும் மீண்டும் படிப்பது மிகுந்த வேதனையானது.
பரிசுத்த வேதாகமத்தில் லூக்கா 13: 6-9 வரை உள்ள வசனங்களில் இயேசு ஒரு உவமையைச் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான். அவன் ஒவ்வொரு வருடமும் அதிலே கனியைத் தேடி வந்தான். ஆனால் ஒன்றையுங் காணவில்லை. தொடர்ந்து மூன்று வருடமாகியும் கனியோ இல்லை எவ்வளவு துயரம்! வளர்ந்து, வளர்ந்து ஒரு கனியையும் தரவில்லையென்றால் எப்படி இருக்கும்? அது மாத்திரமல்ல, இது நிலத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. இதை வெட்டிப்போடு என்று சொன்னபோது தோட்டக்காரன் பரிந்து பேசினான். இந்த உவமையின் முடிவு எழுதப்படவில்லை.
இதை வாசிக்கின்ற நண்பர்களே! தேவன் நமக்கு இன்று அநேக வசதி, நல்ல ஆவிக்குரிய சூழ்நிலைகள் என பல அனுகூலங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் இவையெல்லாவற்றையும் அனுபவித்து விட்டு, தேவன் எதிர்பார்க்கிற எந்த கனியும் இல்லாத வாழ்க்கை வாழ்வோமென்றால், எவ்வளவு வேதனை! நாம் நமக்குத் தேவையானவைகளை தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டு, கனி கொடுக்காமல் வருடங்களை கடத்திக் கொண்டிருந்தால் நம்மை நாமே சற்று சிந்தித்துப் பார்ப்போம்! தேவன் நம்மை வைத்திருக்கிற, கொண்டு போகிற இடங்களில் நம்மால் முடிந்த அளவு தேவனுக்காக ஏதாவது செய்வோம்! அந்த உவமைக்கு முடிவு இல்லை. அதேபோல் நமது வாழ்வும் இன்னும் முடிவடையவில்லை. ஆகவே வாய்ப்புகளை பயன்படுத்துவோம்! கனி நிறைந்த வாழ்வு வாழ்ந்து எஜமானை சந்தோஷப்படுத்துவோம்.
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
1இலட்சம் கிராமங்களுக்கு Rs. 2000 வீதம் கொடுத்து தத்தெடுக்கும் 1 இலட்சம் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250