By Village Missionary Movement
Thursday, 31-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 31.07.2025
தொட்டார்
"இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்..." - மத்தேயு 8:3
நீங்கள் சுகமாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இந்த சாட்சிகளை வாசித்து உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்துங்கள். திருமணமாகாத ஒரு வாலிப சகோதரிக்கு சரீரத்தில் தோல்வியாதி ஏற்பட்டு நீர் வடிந்து கொண்டிருக்கும். அவள் அணிந்திருக்கும் ஆடையில் அந்த நீர் படிந்து ஆடையோடே சரீரத்தில் ஒட்டிக் கொள்ளும். ஆடையை மாற்றும் போது ரத்தம் வரும். கடுமையான வேதனையை அனுபவித்தாள். அம்மாவிடம் சொன்னால் மருத்துவரிடம் அழைத்துச் செல்வார்களே என்ற பயம். இவளுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருநாள் நமது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆண்டவரின் வார்த்தைகளை கேட்டாள். அந்த செய்தியில் "இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்" (எரேமியா 33:6) என்ற வேத வசனத்தைக் கேட்டாள். கர்த்தருடைய வார்த்தைகளை அப்படியே பிடித்துக் கொண்டு, தினமும் அந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லி, விடாமல் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு நாள் காலையில் எழுந்தபோது அற்புதம் நடந்திருந்தது. அவள் சரீரம் முழுவதும் வடிந்து கொண்டிருந்த ரத்தமும் சீலும் முற்றிலும் நின்று போயிருந்தது. அவளால் ஆச்சரியத்தை தாங்க முடியவில்லை. அவளைத் தொட்ட அந்த தேவனுடைய வார்த்தையில் இருந்த தேவ வல்லமை அவளுக்கு தெய்வீக சுகத்தை பரிபூரணமாய் கொண்டு வந்தது. இயேசு கிறிஸ்துவிடம் யார் வேண்டுமானாலும் வரலாம். அவரை அறியாத யாராக இருந்தாலும் அவரை நம்பும்போது அற்புதம் நடக்கும். இயேசுவை நோக்கி குஷ்டரோகி ஒருவன் ஓடி வந்தான். என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று நம்பினான். இயேசு தமது கையை நீட்டி தொட்டார், உடனே சுகமானான். 18 வருடமாய் கூனியாய் இருந்த பெண் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்க வந்தாள். இயேசு அவளை அழைத்து அவள் மீது தன் கரத்தை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்தாள். இயேசு தம்மை தேடி வருகிற யாவரையும் தொட்டு சுகமாக்கினார். இரண்டு குருடர்கள் தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்றவுடனே அவர்களை தொட்டு சுகமாக்கினார்.
இயேசு கிறிஸ்து நம் கண்ணீரை துடைக்கிறவர், நம் தேவைகளை சந்திக்கிறவர், நம்மை விசாரிக்கிறவர், நம்முடைய உபத்திரவங்களை அறிந்திருக்கிறவர். கூப்பிட்ட யாவரையும் தொட்டு சுகமாக்கியவர். அவரை தேடி வருகிறவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறவர். அவரை ஏற்றுக் கொண்ட ஒருவரும் வெறுமையாய் திரும்பி போவதில்லை. அவர் தமது வார்த்தையை அனுப்பி நம்மை குணமாக்குகிறவர். நாம் இயேசு கிறிஸ்துவை தேடுகிறவர்களாய் மாறும்போது அவர் நம் இருதயத்தை தொடுகிறார். நம்மோடு கூட தங்கி இருப்பார். அவர் நம்மைத் தொட்டு எப்பொழுதும் குணமாக்குகிறவராய் இருப்பார். அல்லேலூயா.
- Mrs. எப்சிபா ரவிச்சந்திரன்
ஜெபக்குறிப்பு:-
எழுப்புதல் வாலிபர் முகாம் பற்றி அறிந்த ஒவ்வொருவரும் ஒரு வாலிபனையாவது அழைத்து வர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864