By Village Missionary Movement
Tuesday, 29-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 29.07.2025
கேளுங்கள் கொடுக்கப்படும்
"...கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்" - யோவான் 16: 24
நான் கிறிஸ்துவை அறியாத குடும்பத்தில் பிறந்து, மிகுந்த பக்தி வைராக்கியத்துடன் வளர்ந்தேன். என்னுடைய வாலிப வயதில் எங்கள் நண்பர் குழுவில் ஸ்டெல்லாவும் ஒருவர். அவள் வாயை திறந்தாலே ஸ்தோத்திரம் என்றுதான் கூறுவாள். அவளைக் கண்டாலே எனக்கு பிடிக்காது, கிண்டல் செய்வேன். அதுபோல கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பற்றி அறிவிக்க ஊருக்குள் வந்து விட்டாலே எனக்கு கோபம் வரும். எனக்குத் திருமணமும் ஆனது, என் கணவரும் மிகுந்த பக்தியுடையவர். கோவில் கோவிலாக சென்று வழிபடுவோம். ஒருமுறை அவர் வெளியூரிலுள்ள கோயிலுக்கு சென்று திரும்பி வர பல நாட்கள் தாமதமானது. இப்பொழுது உள்ளதைப் போல உடனே தொடர்பு கொண்டு விசாரிக்க எந்தவித வசதியும் இல்லாத சூழல். என்னுடைய இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு கண்ணீருடன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது எங்கள் வீட்டின் அருகிலுள்ள சகோதரி எங்கள் வீட்டில் ஜெபக்கூட்டம் நடைபெறுகிறது வாருங்கள் என்று கூப்பிட, மனமற்றவளாய் போய் அமர்ந்தேன். என் கணவர் வீட்டுக்கு வரவேண்டுமென வேண்டினேன். கூட்டம் முடிவில் எனக்கு மன அமைதி ஏற்பட்டது. மறுநாள் அதிகாலையில் என் கணவர் வீட்டிற்கு வந்து விட்டார். இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை பிறந்தது.
சிறிது காலத்திற்கு பின் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. அதனால் வேலையும் போனது. இந்நிலையில் எங்கள் வீட்டிற்கு அருகில் நடந்த ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் பாடிய "உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்" என்ற பாடல் என்னைத் தொட்டது. ஜெபிக்கவே தெரியாமல் இருந்த நான், இயேசப்பாவிடம் கேட்டால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், என் கணவரிடம் நாம் ஜெபம் செய்வோம், ஆண்டவர் நமக்கு நன்மை செய்வார் என்று கூறினேன். அப்படியே இருவரும் இணைந்து ஜெபித்தோம், ஆண்டவர் என் கணவருக்கு நல்ல சுகத்தைத் தந்தார். அவருக்கு தெரிந்த ஒரு வேலையும் கிடைத்தது. இருவரும் ஆண்டவரை ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்றோம். ஆலயத்திற்குச் சென்று ஆண்டவரை ஆராதிக்க ஆரம்பித்தோம். 2005 ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக கிராம மிஷனெரி இயக்கத்தோடு இணைந்து ஊழியம் செய்ய ஆண்டவர் கிருபை பாராட்டினார். நான் ஊழியக்காரர்களை, "பையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்" என கேலி செய்தேன். இன்று அதே பையுடன் ஆண்டவர் பணி செய்து வருகிறேன்.
அன்பானவர்களே! நீங்களும் நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் காணப்படுகிறீர்களா? உங்கள் கவலையை, பாரத்தை, தேவையை அவரிடம் சொல்லி விடுங்கள். என்னைச் சந்தித்து என் ஜெபத்திற்கு பதிலளித்த ஆண்டவர், உங்கள் ஜெபத்தைக் கேட்டு நிச்சயம் பதிலளித்து உங்களை சந்தோஷப்படுத்துவார். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. வனாந்தரத்தில் வழியையும், அவாந்தர வெளியில் ஆறுகளையும் பாயப் பண்ணுவார். உங்கள் வாழ்வு மாறும் அல்லேலூயா.
- Mrs. தவமணி வைரவேல்
ஜெபக்குறிப்பு:-
எழுப்புதல் வாலிபர் முகாமிற்காக 1,20,000 ஜெபக் குழுக்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864