By Village Missionary Movement
Sunday, 27-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 27.07.2025 (Kids Special)
எறும்பினிடத்தில் ... ஒரு பாடம்
"சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப்பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்" - நீதி. 6:6
ஒரு அழகான அடர்ந்த காட்டு பகுதியில் விலங்குகள், பறவைகளெல்லாம் வாழ்ந்து வந்தது. அதில் எறும்பும், வெட்டுக்கிளியும் அடிக்கடி சந்தித்து நண்பர்களானார்கள். இரண்டு பேரும் சந்திக்கும்போதெல்லாம் எறும்பு பரபரப்புடன் "ஐயோ! எனக்கு ரொம்ப வேலையிருக்கிறதே, நான் போய் வருகிறேன் நாளை சந்திப்போம்" என்று Bye சொல்லி விட்டு போய்விடும். வெட்டுக்கிளி மனதிற்குள் சிரித்துக் கொள்ளும். கடுகளவு கூட இல்லாத இந்த எறும்புக்கு அப்படி என்னதான் வேலை இருக்கும். வேலை, வேலை என்று வாழ்க்கையை அனுபவிக்காமல் வீணாக்குகிறதே! இப்படியாக நினைத்துக் கொள்ளும். ஆனால் எறும்போ சுறுசுறுப்பாய், எப்போதும் தன் வேலையில் கவனமாய் இருக்கும். அப்படி என்ன வேலைதான் செய்யும் இந்த எறும்பு அப்படீன்னு நினைக்கிறீங்களா குட்டீஸ்! அது தனக்கு தேவையான சாப்பாட்டை அதுவே சேகரிக்கும். மழைக்காலத்தில் வெளியே போய் உணவு தேட முடியாதில்லையா? அப்படியே வெளியில் போனாலும் மழை தண்ணீரில் அடித்துக்கொண்டு போய்விடும் அல்லவா? அதனால் அந்த எறும்பு வெயில் காலத்திலேயே, மழைக்காலத்திற்கு தேவையான உணவை சேர்த்து சேமித்து வைத்துவிட்டு கவலையில்லாமல் இருக்கும்.
அப்புறம் இந்த வெட்டுக்கிளியை பற்றி சொல்லவே இல்லையே. அது என்ன செய்தது தெரியுமா? ஜாலியா ஊர்சுத்திக் கொண்டு இருந்தது. எப்பவும் போல எறும்பும், வெட்டுக்கிளியும் சந்தித்தது. எந்த வேலையும் செய்யாமல் இப்படி ஊர்சுத்துறியே, மழைக்காலத்தில் என்ன செய்வாய்? என்றது எறும்பு. மழை பெய்யும் போது பாத்துக்கலாம். அட நீ வேற! ஜாலியா இருக்க விடமாட்டேங்கிறியே என்று மீண்டும் பறக்க ஆரம்பித்தது. சிறிது நாட்களில் மழைக்காலமும் வந்தது. எறும்பு வீட்டிற்குள்ளேயே இருந்து வேளா வேளைக்குச் சாப்பிட்டு கவலையின்றி வாழ்ந்தது. ஆனால் வெட்டுக்கிளியோ மழையில் நனைந்து வெளியில் போய் உணவை தேட முடியாமல் பசியோடு குளிரில் நடுங்கியபடி, மழை எப்போது விடும் என்று பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தது. காட்டில் மழை அவ்வளவு சீக்கிரம் விடுமா என்ன? வெட்டுக்கிளியின் கதி அம்போதான். நிலைமையை யோசித்துப் பாருங்கள் குட்டீஸ்!
நீங்களும் கூட படிக்க வேண்டிய நேரத்தையெல்லாம் வீணாக்கிவிட்டு விளையாடிக்கொண்டே இருந்தால், பரீட்சை நேரத்தில் வெட்டுக்கிளி மாதிரி முழிச்சிக்கிட்டுதான் இருக்கணும். Home Work எழுதவில்லையென்றால், பொய் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் சுறுசுறுப்பாய் அன்றன்றுள்ள உன் பாடங்களை படித்து விடுவாயானால் பரீட்சையைக் குறித்து பயப்படவே தேவையில்லை, சந்தோஷமாய் இருக்கலாமல்லவா? குட்டீஸ்! இனி ஒவ்வொரு நாளும் ஜெபித்து விட்டு daily சுறுசுறுப்பாய் இருந்து அன்றன்று கொடுக்கப்படும் பாடங்களை அன்றே படித்து முடித்து விடு. JESUS உனக்கு உதவி செய்து உன்னை ஆசீர்வதிப்பார்.
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864