By Village Missionary Movement
Saturday, 26-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 26.07.2025
நினைத்தருளும் தேவன்
"நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்;..." - சங்கீதம் 40:17
ஆசிரியைப் பயிற்சியை பல சிரமங்களுக்கு மத்தியில் முடித்த நேரம் அது. உறவினர், அயலகத்தார் என அனைவரும் எப்படியோ பயிற்சியை முடித்து விட்டாய். ஆனால் அரசு வேலையெல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஏதாவது தனியார் பள்ளியில் விண்ணப்பித்து வேலைக்குப் போ. அது உன் குடும்பத்திற்கு உதவியாயிருக்கும் என்று சொன்னார்கள். என் நிலைமையை எல்லாம் இயேசு அறிவார் என்று உணர்ந்தவளாய் அவர்கள் சொன்னபடியே ஒரு தனியார் பள்ளியில் பணிக்கு சேர்ந்து விட்டேன்.
சரியாக ஓராண்டு முடித்த போது, "ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் மாநிலத்தில் ஆட்சி பொறுப்பேற்கிறார்" என்ற தலைப்பு செய்தியை வாசித்தேன். அடுத்த சில தினங்களில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை தமிழகம் முழுவதும் நிரப்பிட வேண்டும் என்று ஆளுநர் தம் அலுவலகத்தில் முதல் கையொப்பமிட்டார் என்பதே முதன்மை செய்தி. அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாக வீட்டிற்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது. என் உள்ளத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி. தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு பணியில் சேரும்படியான உத்தரவு என ஒன்றன்பின் ஒன்றாக மூன்று கடிதங்கள் வரவே, நான் பிரமித்துப் போனேன். அடுத்த மூன்று தினங்களில் என் இருப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்த திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆரணி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக 1988 ல் பணியில் சேர்ந்தேன்.
"அது கர்த்தரால் ஆயிற்று, நம் கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்ற வேத வசனம் என் வாழ்வில் நிறைவேறிற்று. பணி ஆணையை கையில் பெற்று கண்களில் நீர் பெருகிவர எனக்கா...? அரசு வேலையா...? என்று உள்ளம் பூரித்துப்போனது. ஆம், உண்மையாய் தம்மைத் தேடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாய் இருக்கிறார். எனக்கு அப்படியாகவே அவர் இருந்து என் காரியத்தை மேற்போட்டுக் கொண்டார். உங்களுக்கும் அவர் அப்படியேச் செய்வார். கர்த்தர் எனக்காகவே அரசியலில் இடைபட்டு ஆளுநர் மூலம் பணி உத்தரவு கொடுத்தாரே, அவர் எத்தனை நல்லவர்!
அன்பானவர்களே! உங்களுக்கும் அவர் பெரிய காரியங்களைச் செய்ய, நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? அவரை விசுவாசியுங்கள், அவரால் செய்யக்கூடாதது எதுவுமில்லை. அவரால் எல்லாம் கூடும். முழுமனதோடு அவரை நம்ப வேண்டும். உங்களுக்கு இன்னது தேவை என்று அறிந்து செய்வது நிச்சயமே! எனக்குச் செய்தது போலவே உங்களுக்கும் செய்வார். தடைப்பட்ட காரியங்களுக்கான வாசல்களைத் திறப்பார். என் 30 வருட ஆசிரியர் பணியில், பல உயர்வுகளையும், விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று ஓய்வு பெற்றேன். என் முதிர் வயதிலும் அவரையே பின்பற்றுகிறேன். "நம் விசுவாசமே இந்த உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்" ஆமென்.
- Mrs. எமீமா சௌந்தரராஜன்
ஜெபக்குறிப்பு:-
கர்த்தரை அறியாத, பின் மாற்றத்திலிருக்கும் பாவ, வியாதி கட்டுகளிலிருக்கும், கர்த்தருக்காக எதையாவது செய்ய வேண்டுமென நினைக்கிற வாலிபர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள ஜெபியுங்கள். .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864