By Village Missionary Movement
Wednesday, 23-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 23.07.2025
கர்த்தரை சார்ந்து கொள்
"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,..." - நீதி. 3:5,6
நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தாலும் எனக்கும் கர்த்தருக்கும் தனிப்பட்ட உறவு இல்லாமலிருந்தது. ஆனால் ஆலயத்திற்குச் செல்வது, வீட்டில் கிறிஸ்தவ பாடல்கள் கேட்பது, கிறிஸ்துமஸ் என்றால் வீட்டை அலங்கரிப்பது என இருந்தேன். ஆனால் தேவனுக்கு தூரமாயிருந்தேன். எனக்கு படிப்பில் ஆர்வம் இல்லாததால் பத்தாம் வகுப்பு முடித்ததும், என் அப்பாவிற்கு கடையில் உதவி செய்தேன். நண்பர்களுடன் சேர்ந்து சினிமா பார்க்கச் சென்றேன். அம்மா மற்றும் என் உடன் பிறந்தவர்கள் என்னைத் திட்டினர். நான் நிம்மதி இல்லாமல் மனதில் ஒருவித வெறுமையுடன் காணப்பட்டேன்.
எனவே சென்னைக்குச் சென்று அங்கு ஒரு வேலையில் சேர்ந்தேன். அங்கும் நண்பர்களுடன் சேர்ந்து சினிமா பார்ப்பது மட்டுமல்லாது குடிப்பழக்கமும் வந்தது. சினிமா, குடி என இரண்டிற்கும் அடிமையானேன். என் பெற்றோர், உடன்பிறந்தோர் எனக்காக ஊக்கமாய் ஜெபித்தனர். நானோ விடுதலையாகாததால் என்னை வெறுக்க ஆரம்பித்தனர். நான் இந்த குடிப்பழக்கத்தை விட வேண்டும் என நினைத்தாலும் என்னால் அதை விட முடியவில்லை. வீட்டிற்கு வரவேண்டும் என ரயில் நிலையம் வந்து டிக்கெட் எடுத்தாலும், டிக்கெட்டை கிழித்துப் போட்டுவிட்டு மீண்டும் ரூமிற்குச் சென்று விடுவேன். இரண்டு முறை விபத்து ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று கர்த்தரின் பெரிதான கிருபையால் காக்கப்பட்டேன். என் வீட்டார் வெறுப்பதை உணர்ந்த நான் மரித்து விடலாம் என எண்ணி தற்கொலைக்கு முயற்சித்தேன். அதிலும் கர்த்தர் என்னைக் காத்தார்.
ஒரு சகோதரன் என்னை வீட்டிற்கு அழைத்து வந்து தூத்துக்குடியில் இருந்த என் அண்ணன் வீட்டில் விட்டனர். அண்ணன் என்னை ஒரு ஜெபக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது என் காலின் பாதத்தில் இருந்த பெரிய புண் ஜெபித்ததும் ஆற ஆரம்பித்தது. பல மாதங்களுக்குப் பின் அன்று நன்கு தூங்கினேன். வீட்டிற்கு வந்து சிறு பிள்ளையைப் போல அழுது "என் வாழ்வு உமக்குத்தான்" என ஜெபித்தேன். பின்பு அதே அண்ணனின் வீட்டு ஜெபக் கூட்டத்திற்குச் சென்ற போது, டேவிட் அண்ணன், "ஊழியம் செய்து கர்த்தரின் கண்ணீரைத் துடைக்க வாங்க" என அழைப்பு விடுத்தார். VMM ல் இணைந்து என்னால் இயன்ற ஊழியத்தை செய்தேன். கர்த்தர் எனது வெறுமையை மாற்றி, எனக்கு சமாதானத்தையும், சுகத்தையும் தந்தார்.
அதோடு மட்டுமல்லாது என் மீது நானே வெறுப்பு கொண்டு, திருமணம் வேண்டாமென்றிருந்த எனக்கு நல்ல இரட்சிக்கப்பட்ட, ஊழியம் செய்யக்கூடிய மனைவி, பிள்ளையைத் தந்தார். குடும்பமாக ஆறு ஆண்டுகளாக ஊழியம் செய்து வருகிறோம். நீங்களும் வாழ்வில் வெறுமை, மனிதர்களால் வெறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தால் உங்கள் வழியை கர்த்தரிடம் ஒப்படையுங்கள். அவர் உங்களை நேசித்து இவ்வுலகில் சந்தோஷம், சமாதானம் தந்து மறுமையில் நித்திய ஜீவனைத் தருவார்.
- M.ஸ்டாலின் ராஜா
ஜெபக்குறிப்பு:-
ஆகஸ்ட் 15 முகாமிற்காக கட்டப்பட்ட பிளக்ஸ் பார்க்கிற யாவரும் முகாமில் கலந்து கொள்ள, முகாமிற்காக ஜெபியுங்கள்..
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864