By Village Missionary Movement
Saturday, 19-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 19.07.2025
ஆண்டவரின் பாதுகாப்பு
"நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்;..." - ஏசாயா 43:2
நம் ஆண்டவர் அன்பும், இரக்கமும் மன உருக்கமும் உடையவர். "பயப்படாதே நான் உன்னோடேகூட இருக்கிறேன்" என்று எல்லாக் காலத்துக்குமான வாக்குத்தத்தம் கொடுத்தாலும், சில குறிப்பிட்ட வாக்குத்தத்தங்களை நமக்கு முன் கூட்டியே கொடுத்து நம்மை பெலப்படுத்துகிறார்.
கடந்த 2023 ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் கனமழை பெய்து அதிகசேதம் அடைந்ததை கேள்விபட்டிருப்பீர்கள். அன்று அதிக கனமழை பெய்ததால், என் மகள் வீட்டினுள் வெள்ளம் புகுந்தது. எனவே நாங்கள் முதல் மாடிக்கு ஏறிச்சென்று விட்டோம். அங்கே சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். ஆனாலும் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. எனவே தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தோம். அவர்கள் வந்து எங்களைப் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தபொழுது, கழுத்து வரை வெள்ள நீர் வந்துவிட்டது. நான், என் மகள், மருமகன், பேத்திகள் என 6 பேரும் மிக பத்திரமாக மீட்கப்பட்டோம். அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாயிருந்தபடியாலும், வெள்ளம் வந்த நேரம் மாலை 3-5 மணி நேரமானதாலும், பத்திரமாக வெளியேர முடிந்தது.
நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை. நீ தண்ணீரைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன் என்ற வார்த்தையின்படி தேவன் எங்களுடனே இருந்து எங்களை அற்புதமாய் பாதுகாத்தார். ஆண்டவரை ஏற்றுக்கொண்ட நாட்களில் ஆண்டவர் என்னோடு பேசி எனக்கென்று கொடுத்த வாக்குத்தத்தம், தான் ஏசாயா 43:2. எனக்கு அது முதலில் விளங்கவில்லை. ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் அந்த வசனத்தின் படியே தண்ணீரைக் கடக்க வேண்டிய சூழ்நிலை வந்த பொழுது, அதை 100 ரூ உணர்ந்து அவருக்கு நன்றிச் செலுத்தினேன்.
இன்னொரு முறை நான் திருநெல்வேலியிலுள்ள என் மகளின் வீட்டில் 90 வயதான என் அம்மாவை விட்டுவிட்டு சென்றேன். அன்று இரவு அங்கு மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு விட்டது. உடனே தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைத்து பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் என் தேவனே என் குடும்பத்தை அற்புதமாய் பாதுகாத்தார். நடந்ததை அறிந்து நான் தேவனைத் துதித்தேன். பொருட் சேதம் மட்டுமே ஏற்பட்டது. இப்படியாக தேவன் என்னை தண்ணீரிலுமிருந்தும், அக்கினியிலுமிருந்தும் பாதுகாத்தார். என் வாழ்வில் தேவன் என்னை அற்புதமாகவே பாதுகாத்து வந்துள்ளார்.
இதை வாசிக்கின்றதான நண்பர்களே! தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம். செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டு வந்து விட்டீர் என்று தாவீது கூறியது போல், என்னுடைய வாழ்வில் அற்புதம் செய்த ஆண்டவர், நீங்கள் இருக்கும் சூழ்நிலை எதுவானாலும் உங்களை தப்புவிப்பார் அல்லேலூயா.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:-
எல்லா பணித்தளங்களிலும் மிஷனெரி பயிற்சி மையங்கள் கட்டப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864