By Village Missionary Movement
Friday, 18-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 18.07.2025
துதித்துப் பாடுங்கள்
"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்" - சங்கீதம் 34:1
கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக கடுமையான பொருளாதார நெருக்கடியினால் என்னுடைய குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் விளைவாக, பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் என்னால் செலுத்த இயலவில்லை. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று வாக்களித்த தேவன் அந்த இக்கட்டான சூழ்நிலையின் மத்தியிலும் என்னோடு கூட இருந்து நடத்தியதை என்னால் உணர முடிந்தது. அனுதினமும் குடும்பமாக கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்தோம். கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்ற வசனத்தின்படி, படிப்படியாக தோல்வியடைந்த எல்லா காரியத்திலேயும் கர்த்தர் எங்களுக்கு ஜெயத்தை தந்தார். இழந்தவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ள கர்த்தர் கிருபை செய்தார்.
பரிசுத்த வேதாகமத்தில், யோசுவா 6 ஆம் அதிகாரத்தில் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக எரிகோ அடைக்கப்பட்டிருந்ததாக வாசிக்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்தங்களை பெற்றுக் கொண்டு, அமைதியாக நடந்தார்கள். உடன்படிக்கை பெட்டியை சுமந்தார்கள். எக்காளம் ஊதி ஆர்ப்பரிக்கும் போது எரிகோ மதில் இடிந்து விழுந்தது. ஆறு நாட்களும் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் சுற்றினார்கள். ஏழாம் நாளிலே, ஏழு முறை சுற்ற வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். எரிகோ மதிலை ஒருமுறை சுற்றுவதற்கு நான்கு மைல் தூரம் நடக்க வேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் ஏழாம் நாளிலே அவர்கள் 28 மைல் தூரம் நடந்திருக்க வேண்டும். எந்தவொரு முறுமுறுப்போ, வாக்குவாதமோ இல்லாமல் அமைதியாக இந்த சூழ்நிலையை கடந்து வருகிறார்கள். ஏழாம் நாளிலே எக்காளம் ஊதி ஆர்ப்பரிக்கும் போது தடையாக நின்ற எரிகோ மதில் இடிந்து விழுந்தது.
ஆம், பிரியமானவர்களே! உங்கள் துதி எரிகோ மதில் போன்ற பிரச்சனைகளை அசைக்கும், தடையாயுள்ள மதில் சுவரை விழச் செய்யும். ஆம், தடைகளை வீழ்த்துவதற்கென்று கர்த்தர் ஏற்படுத்தியுள்ள ஆயுதம் தான் துதியின் ஆயுதம். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு கர்த்தரைத் துதிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு எரிகோ மதில் நொறுங்கி விழும். நமக்கு ஏற்படக்கூடிய தோல்விகள், பிரச்சனைகள், நெருக்கங்களின் மத்தியில் நம் அணுகுமுறை எப்படிப்பட்டதாய் உள்ளது? மனிதர்களை நாடிச் செல்வோமேயானால் நம் நிலைமை இன்னும் மோசமானதாய் மாறிவிடும். மாறாக நம் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளையும் அறிந்த கர்த்தரை நோக்கிப் பார்த்து, துதிப்போமேயானால் நம் வாழ்வு மாற்றம் அடையும். நமக்கு முன்பாக ஒருவரும் எதிர்த்து நிற்கக் கூடாதபடி வாக்கினாலும், வல்லமையினாலும் கர்த்தர் நம்மை நிரப்புவார். மதில்கள் நொறுங்கி விழுந்து புதிய வாசல் நமக்கு முன்பாக திறக்கப்படும். அந்த வாசல் பசுமையான நாட்களுக்குள் நம்மைக் கொண்டுச் செல்லும். ஆம், பாலும் தேனும் ஓடுகிற கானானை நாம் சுதந்தரித்துக் கொள்ளப் போகிறோம். அல்லேலூயா!
- Bro. சேகர்
ஜெபக்குறிப்பு:-
மருத்துவமனை ஊழியத்தின் மூலம் சந்திக்கப்படும் மக்கள் இரட்சகரை அறிய ஜெபியுங்கள்..
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864