By Village Missionary Movement
Thursday, 17-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 17.07.2025
தாழ்வில் நம்மை நினைத்தவர்
"நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது" - சங்கீதம் 136:23
ஒருவன் நன்றாய் வாழ்ந்திருக்கும் போது அவனைச் சுற்றி ஏராளமானோர் இருப்பார்கள். ஒருநாள் அவன் வாழ்வில் வீழ்ந்து போனால் எல்லோரும் அவனை விட்டு விலகி விடுவார்கள். பகைவனைப் பார்ப்பது போல் ஓரடி தள்ளியே நிற்பார்கள். இதுதான் மனிதர்களின் நிலை! 2005 ஆம் ஆண்டு எங்கள் வாழ்வு பொருளாதார ஆசீர்வாதத்தில் உச்சத்தில் இருந்தது. பணத்தை எண்ணுவதற்கு கை வலிக்கிறது என சொல்லுவேன், அப்படிப்பட்டதான செழிப்பு!
ஆனால், ஒரு சில ஆண்டுகளில் சுயத்தின் காரணமாக ஆழமாக உழாமல், அகலமாக உழுதபடியால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் செலுத்த முடியாமல் தவித்தோம். எங்கள் குடும்பத்தார் முன்பாகவும், சமுதாயத்தின் முன்பாகவும் வெட்கப்பட்டு இருந்தோம். உற்றார், உறவினர், நண்பர்கள் ஒரு எல்லை வரை தான் உதவினர், பின்பு விலகிச் சென்றனர். ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்படும் நிலைமை வந்தது. அப்போதுதான் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கு வந்தது.
அதன் பின்பு நாங்கள் கணவனும், மனைவியுமாய் ஒருமனப்பட்டு, கைகளைக் கோர்த்து ஜெபித்தோம். யார் எங்களை கைவிட்டாலும், தேவன் எங்களை கைவிடவில்லை. எங்களுக்கு தெளிவான மனநிலையை தேவன் கொடுத்தார். நாங்கள் முன்னேற இதுதான் வழி என, "கலங்கிய குட்டையின் மத்தியில் உள்ள தெளிந்த நீரூற்றைப் போல" சில திட்டங்களை தேவன் என் கணவர் மனதில் தந்தார். விசுவாசத்தைக் கைவிடாமல், தேவன் ஒருவரை மட்டுமே ஊன்றுகோலாக வைத்து படிப்படியாக முன்னேறினோம். கடன்கள் யாவற்றையும் ஒவ்வொன்றாக அடைத்தோம். இன்று, எல்லோரும் எங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். பள்ளத்தாக்கு போன்ற அனுபவங்களை கடந்து வந்த நாட்களிலே, தேவன் எங்களோடு இருந்து, நடத்தி வந்த கிருபையை எண்ணிப்பார்க்கிறோம். நாங்கள் வாழ்ந்திருந்த காலங்களை விட, நாங்கள் தாழ்ந்திருந்த காலங்களில் எங்களைப் பற்றி தெரிந்தவர்கள் அநேகரானார்கள்.
இன்று நாங்களும், எங்கள் குடும்பமும் தேவனை மட்டுமே உயர்த்துகிறோம், மகிமைப்படுத்துகிறோம். பிரியமானவர்களே, சிறுமைப்பட்ட நாட்களிலும், துன்பத்தின் மத்தியிலும், நம்மை நடத்தி வந்த தேவ கிருபையை எண்ணிப் பாருங்கள். நம் தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. நம் தாழ்வில், படுகுழியில் இருக்கும் நம்மை நினைத்து கை தூக்கி எடுப்பது தேவன் மட்டுமே! அவர் மட்டுமே துதிக்கத்தக்கவர். ஆமென்! அல்லேலூயா!
- Mrs. பியர்லின் செல்லாபாய்
ஜெபக்குறிப்பு:-
'Arise Joshua’ ஊழிய திட்டத்தின் மூலம் சந்திக்கப்படும் ஊழியர்களின் பிள்ளைகள் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864