By Village Missionary Movement
Monday, 14-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 14.07.2025
வழிநடத்தும் தேவன்
"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;..." - சங்கீதம் 32:8
அன்பு நண்பர்களே! என் வாழ்வில், என்னுடைய கவனக்குறைவினாலும், சொற்ப மதியீனத்தாலும் இழக்க இருந்த ஆசீர்வாதத்தை எப்படி கர்த்தர் பாதுகாத்தார் என்பதைக் குறித்து உங்களோடு சாட்சியாக பகிர்ந்து கொள்கிறேன்.
நான் இறையியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில், ஒருநாள் காலை வேளையில் எனக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தேன். நான் கணக்கு வைத்துள்ள வங்கியின் மேலாளர் பேசுவதாகக் கூறி, கணக்குகளை டிஜிட்டலாக மாற்றுகிறோம். உங்களுக்கு ஒரு OTP எண் வரும். அதைப் பார்த்துக் கூறுங்கள் என்றார். நானும் சற்றும் யோசிக்காமல் என் அலைபேசிக்கு வந்த OTP எண்ணைக் கூறினேன். அப்பொழுது வகுப்புகள் துவங்குவதற்கான மணி ஒலித்தது. அந்த நேரத்தில் ஆண்டவர் என்னிடம், இப்பொழுது மணி என்ன? காலை 9 மணிக்கெல்லாம் வங்கியில் இருந்து அழைப்பார்களா? என்று உணர்த்திய போது தான் எனக்கு சுய நினைவு வந்தது போல் இருந்தது. ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்டு பொறுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, வேகமாக ஆட்டோவில் வங்கிக்குச் சென்றேன்.
என்னுடைய மகனின் கல்விக் கட்டணத் தொகைக்கான பணம் மட்டுமே அப்போது என் வங்கிக்கணக்கில் இருந்தது. அப்பணம் எடுக்கப்பட்டால், அந்த வருடக் கல்விக் கட்டணத்தை செலுத்த இயலாது. என்னுடைய அறிவின்மையாலும், கவனக்குறைவாலும், நானே வங்கித் தகவல்களை கொடுத்து விட்டேனே, இனி என்ன செய்வது? ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும் என ஜெபித்துக் கொண்டே வங்கிக்குச் சென்றேன். ஆண்டவரின் பெரிதான கிருபையால், நான் வங்கிக்கு செல்லும்வரை என்னுடைய அக்கவுண்டில் பணம் ஏதும் எடுக்கப்படவில்லை. வங்கி ஊழியரும் உடனே, பணம் வேறு யாரும் எடுக்க முடியாதபடி, எல்லாவற்றையும் சரி செய்து புது ATM card கொடுத்து, எனக்கு அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தார். இப்படியாக என் மகனின் கல்விக் கட்டணம் அந்த ஆண்டு கடவுளின் கிருபையால் காப்பாற்றப்பட்டு கட்டப்பட்டது.
பல நேரங்களில் நாம் இப்படித்தான் எத்தனை விழிப்புணர்வுகளை அரசாங்கம் அளித்தாலும், பிறர் எத்தனை அறிவுரைகளைக் கூறினாலும், நாம் மறந்து விடுவது போல ஆண்டவர் உணர்த்துகின்ற காரியத்திலும், மதியற்றவர்கள் போல் கவனமற்று நடந்து கொள்கிறோம். "அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். " (ஏசாயா 65:24) என்ற வசனத்தின்படி ஆண்டவர் நம்மை பாதுகாத்து, போதித்து வழிநடத்துகிறார். உங்களுடைய வாழ்க்கையிலும் அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரது வழிநடத்துதலை பெற்று அவருடைய ஆலோசனையின்படி நடப்பீர்களானால் நமது பாதை செம்மையாய் ஆசீர்வாதமாய் அமையும். ஆமென்.
- Rev. எலிசபெத்
ஜெபக்குறிப்பு:-
பணித்தளங்களில் முழு வேதாகமம் வாங்கியவர்கள் அதை கிரமமாக வாசிக்க, விசுவாசத்தில் உறுதிப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864