By Village Missionary Movement
Monday, 07-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 07.07.2025
ஆலோசனைக் கர்த்தர்
"...வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்." - ஏசாயா 30:21
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, உங்களுக்கு அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் கர்த்தரிடத்தில் நெருங்கி உறவாடும் போது, ஒவ்வொரு விஷயத்திலும், அது சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் நம்மை வழிநடத்த தேவன் வல்லவராயிருக்கிறார். என் குடும்பத்தில் தேவன் செய்த ஒரு அற்புதத்தை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
என் மகன் MBA முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த போது, பல கம்பெனிகளில் நேர்முகத்தேர்வுக்குச் சென்றான். எல்லாவற்றிலும் Select ஆகவும் செய்தான். எனவே எந்த கம்பெனியில் சேர்வது என்ற குழப்பம் எங்களுக்குள் காணப்பட்டது. கடைசியாக அவன் ஒரு கம்பெனியை தேர்வு செய்து, செல்லலாம் என்ற முடிவில் இருந்தான். ஆனால் எனக்குள் ஒரு குழப்பம் இருந்தது, இது தேவனுக்கு சித்தமானதா? என்று. அன்று இரவு நான் இதற்காக ஜெபித்துவிட்டு தூங்கிவிட்டேன். என்னுடைய கனவில் என்னுடைய பழைய தோழியை நான் பார்ப்பது போலவும், அவளுடைய கழுத்தில் ஒரு ID கார்டு இருப்பது போலவும், அதில் ஒரு கம்பெனியின் பெயர் எழுதப்பட்டிருந்ததையும் கண்டேன்.
பின்னர் இது குறித்து எனது மகனிடமும் கூறினேன். அப்போது அவன் தான் select ஆன கம்பெனிகளுள் இதுவும் ஒன்று என்று கூறினான். அன்றே அங்கிருந்து அழைப்பும் வந்தது. எனவே நாங்கள் தேவன் சொப்பனத்தில் காண்பித்ததையே தேர்வு செய்தோம். விசாரித்ததில் எல்லா கம்பெனியை விட அங்கு நல்ல சம்பளம் மற்றும் பதவி உயர்வும் இருப்பது தெரியவந்தது.
இதை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்களும் கூட, நீண்டகாலமாய் ஏதோ ஒரு நன்மைக்காக காத்துக் கொண்டிருக்கலாம், அல்லது சரியான தீர்மானம் எடுக்க முடியாமல் கலங்கிக் கொண்டிருக்கலாம். காரியம் எதுவானாலும் தேவனிடம் விசாரிக்கும் போது தேவ ஆவியினால் நாம் தெளிவாக நடத்தப்படமுடியும். ஒவ்வொருவரோடும் ஒவ்வொரு விதத்தில் தேவன் இடைபடுவார். சொப்பனம், தரிசனம், செய்திகள், எல்லாவற்றிற்கும் மேலாய் வேத வசனத்தின் மூலம் தேவன் தெளிவாய் நம்முடன் பேசுவார். நாம் செய்ய வேண்டியது ஒன்றே. அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவரையே முற்றிலுமாகச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதே. அப்போது நம்மை வழிநடத்த, நம் வாழ்க்கையை உயர்த்த, நமக்கு ஆலோசனை தர, நம் தேவன் வல்லவராயிருக்கிறார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்.
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:-
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் சந்திக்கப்படுவோர் இயேசுவின் அன்பிற்குள் வர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864