By Village Missionary Movement
Saturday, 05-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 05.07.2025
நம்மை தெரிந்துகொண்டவர்
"நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;..." - யோவான் 15:16
ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்த எனக்கு 3 தங்கைகளும், ஒரு தம்பியும் உண்டு. என்னுடைய தாயார் எங்களை ஒழுங்காக ஆலயத்திற்கும், ஓய்வுநாள் பள்ளிக்கும் அனுப்புவார்கள். வீட்டிற்கு வந்தவுடன் மனப்பாட வசனத்தைச் சொல்லச் சொல்வார்கள். இவ்வாறாக இருக்கும்போது என்னுடைய 11 வது வயதில் என்னுடைய தாயார் மரித்து விட்டார்கள். மிகவும் அன்பான என் தாயாரின் இறப்பு என்னை வெகுவாக பாதித்தது. அப்பா எங்களை மிகவும் நேசித்து அன்போடு கவனித்துக் கொண்டார்கள். அதுவும் நீடிக்கவில்லை. அவர்களும் 7 வருடங்கள் கழித்து இறந்து விட்டார்கள். அவர்கள் இருவரது இறப்பு எங்களை அதிகம் பாதித்தது. அப்பாவுடன் பிறந்தவர்கள் எங்களை தங்கள் வீடுகளில் தங்க வைத்து எங்களை கவனித்துக் கொண்டார்கள்.
என்னுடைய வாழ்க்கை ஒரு நடை பிணம் போல் காணப்பட்டது. அன்பிற்காக ஏங்கினேன். ஏன் என் வாழ்க்கையில் இப்படி நடந்தது என்று நினைத்தேன். பின்பு எனக்கு FMPB லுள்ள ஒரு மிஷனெரியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நான் அலகாபாத்திலுள்ள Bible College ல் 2 வருடங்கள் படித்தேன். அங்கு ஆண்டவர் என்னோடு பேசினார். யோவான் 15:16 ல் நீ என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் என்றார். இரட்சிக்கப்பட்ட நாங்கள் பீஹாரில் டெப்ரிகோல் மலையில், மால்தோ இன, சந்தாளி இன மக்கள் மத்தியில் ஊழியம் செய்தோம்.
அதன் பிறகு விஷ்வவாணி ஊழியத்தில் இணைந்து டெல்லி பணித்தளத்தில் பணியாற்றினோம். Dr. ஆனந்தி ஜெபசிங் அவர்கள் குடிசை வாழ் பிள்ளைகளுக்கென்று கல்வி மேம்பாட்டுத் திட்டத்தையும், அவர்கள் மத்தியில் சுவிசேஷபணி செய்யவும் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம். அற்பமான ஆரம்பம், 10 பிள்ளைகளுடன் ஆரம்பித்தோம். இன்று அது, மரமாக, கிளையாக 2,000 க்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்கும் ஒரு கல்வி மையமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. அங்கு கற்ற பிள்ளைகளே இன்று அநேகர் ஆசிரியர்களாக உள்ளனர். சமுதாயப் பணியும், தேவபணியும் செய்து ஆத்துமாக்களை கர்த்தருக்கென்று ஆதாயம் செய்தோம். பிற்பாடு தமிழ்நாட்டிலும், பாண்டிச்சேரியிலும், விழுப்புரத்தில் இருந்து கடலூர் வரை, எல்லா சமுதாயத்தினர் மத்தியிலும், மீனவர்கள் மத்தியிலும் தேவன் எங்களை பயன்படுத்தினார். அநேக திருச்சபை ஊழியத்திலும் பயன்படுத்தினார். இப்பொழுது நாங்கள் VMM ஊழியத்தில் ஓய்வு பெற்ற மிஷனெரிக் குடும்பமாக இருந்து தேவ பணியாற்றி வருகிறோம்.
அன்பானவர்களே! நம்பிக்கை இழந்த என் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரமாய் அவர் வந்து, பல மாநிலங்கள், பல இன மக்கள் என அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை சொல்ல கிருபை செய்தார். இன்றும் உங்களது சூழ்நிலை எதுவானாலும் அவர் மாற்றி பிறருக்கு ஆசீர்வாதமாய் பயன்படுத்துவார். ஏனெனில் நாம் அல்ல, அவரே நம்மை தெரிந்து கொண்டவர்.
- Mrs. பாத்திமா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
VBS ஊழியங்கள் மூலம் சந்தித்த பிள்ளைகள் இயேசுவின் சந்ததியாய் எழும்ப ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864