By Village Missionary Movement
Monday, 30-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 30.06.2025
வெளிச்சம்
"...எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” - யோவான் 1:9
கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் 40 வருடங்களாக மின்சாரம் இல்லாதிருந்தது. அவர்கள் எவ்வளவு பிரயாசப்பட்டும் அந்த வீட்டில் மின்சாரம் கிடைக்க இல்லாதிருந்தது. எனவே தன்னுடைய வீட்டிற்கு வெளிச்சம் கிடைக்க, போராடி ஜெபிக்கத் தொடங்கினார்கள். ஆலயத்திற்குச் சென்று காலையும், மாலையும் தவறாது ஜெபித்தார்கள். ஜெபத்துடன் அந்த பகுதியிலுள்ள கலெக்டர் ஆபீஸ்க்கு சென்று மனு ஒன்றையும் கொடுத்தார்கள். எப்படியாவது இந்த மனு கலெக்டரின் கவனத்திற்கு வர வேண்டுமென்று அதிகமாய் ஜெபித்தார்கள். கலெக்டரின் உத்தரவின் பேரில், சில நாட்களில் அந்த ஊருக்கு லைன் மேன் ஒருவர் நியமிக்கப்பட்டார். விசாரித்த போது, சகோதரியின் வீட்டில் மின்சாரம் இல்லை என அறிந்து, மூன்று மாதங்களில் அந்த வீட்டிற்கு மின்சாரம் கிடைக்கும் படிசெய்தார். 40 வருடங்களாக இருளில் வாழ்ந்த அந்த சகோதரியின் குடும்பத்தினர் மின்சார இணைப்பால் வெளிச்சத்தைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டனர்.
வேதத்திலும் கொர்நேலியு என்னும் பேர் கொண்ட மனுஷன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தார். அவர் தேவபக்தியுள்ளவரும், வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவருமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவருடைய வாழ்வில், கிறிஸ்துவின் வெளிச்சம் அவரை சந்தித்தது. அவர் கிறிஸ்துவே மெய்யான ஒளி என கண்டுக்கொண்டார். கிறிஸ்து என்னும் ஒளி நம்மில் இருந்தால் மட்டுமே சரியான வழியை கண்டு கொள்ளுவோம்.
எனக்கு அருமையான தேவ ஜனமே! சூரியனைச் சுற்றி வருகிற சந்திரன், சூரியனின் ஒளியை பெற்று உலகத்திற்கு வெளிச்சம் தருவது போல நாமும் கிறிஸ்துவின் ஒளியை பெற்றுக்கொண்டு, உலகிற்கு வெளிச்சம் தருவோம். சூரியனை விட்டு சந்திரன் விலகிப்போனால் சூரியனின் ஒளியை பெற முடியாது. அதே போலதான் கிறிஸ்துவின் ஒளி நம்மிடம் இல்லாவிட்டால் பிறருக்கு ஒளி தரமுடியாது. இருளில் இருக்கிற போது ஆடையில் இருக்கிற அழுக்கு தெரியாது. வெளிச்சம் படும் போது தான் அழுக்கு தெரியும். கிறிஸ்துவின் வெளிச்சம் நம்மில் படும்போது தான், பிறருக்கு வெளிச்சம் கொடுக்கிறவர்களாகவும், இருளிலுள்ளவர்களுக்கு வெளிச்சத்தை காட்டுகிறவர்களாகவும் நாம் பிரகாசிக்க முடியும்.
- S. சிந்து
ஜெபக்குறிப்பு:-
கிளை அலுவலகங்களில் நடைபெறும் பணிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864