By Village Missionary Movement
Saturday, 28-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 28.06.2025
தீமையை விட்டு விலகு
"...தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;..." - மத்தேயு 5:39
ஆட்டுக்குட்டி ஒன்று ஓடையில் தண்ணீர் பருகிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட ஓநாய் ஆட்டுக்குட்டியோடு தகராறு செய்ய நினைத்து ஆட்டுக்குட்டியைப் பார்த்து, "இது நான் தண்ணீர் குடிக்கிற இடம் என்று உனக்கு தெரியாதா? ஏன் தண்ணீரை கலக்குகிறாய்?" என்றது. ஆட்டுக்குட்டியோ சாதுவாக ஐயா, நீங்கள் தான் மேல் பக்கம் உள்ள தண்ணீரைக் குடிக்கிறீர்கள். உங்கள் பக்கம் இருந்து தானே எனக்கு தண்ணீர் வருகிறது. நீங்கள் குடிக்கும் தண்ணீரை நான் எப்படி கலக்க முடியும் என்றது. அதற்கு அந்த ஓநாய், உன் வாயை மூடு என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக்குட்டியின் மேல் பாய ஆயத்தமானதை கண்டதும், ஐயோ நாம் அமைதியாய் சென்றிருக்கலாமோ என ஆடு யோசிக்கும் ஒரு நொடியில் ஓநாய் அதன் மீது பாய்ந்து கொன்று போட்டது.
வேதத்தில் ஒரு சம்பவத்தை வாசிக்கிறோம். சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி : கர்த்தர் தெரிந்து கொண்ட சவுலை பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமமானவன் இல்லை என்றார். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து, "ராஜா வாழ்க" என்று ராஜாவை வாழ்த்தினார்கள். ராஜா மகிழ்ச்சியாய் இருக்கின்ற நேரத்தில், தீமையான பேலியாளின் மக்கள், இவனா நம்மை ரட்சிக்கப் போகிறான் என்று சொல்லி, சவுலுக்குக் காணிக்கை கொண்டுவராமல் அவரை அசட்டை பண்ணினார்கள். சவுல் அந்த பேலியாளின் மக்களிடம், ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டு இருந்தால், ஓநாய் ஆட்டுக்குட்டியின் மேல் பாய்ந்தது போல சவுலின் மேல் அந்த பேலியாளின் மக்கள் பாய்ந்து அவரைக் கொன்றிருப்பார்கள். ராஜ்யபாரம் ஏற்றுக் கொள்கிற நேரத்தில் மிகப்பெரிய பிரச்சனை வந்திருக்கும். ஆனால் சவுலோ காது கேளாதவர் போல புத்தியாய் நடந்து கொண்டார்.
அருமையான தேவபிள்ளையே, உங்களையும் சில மனிதர்கள் அற்பமாய், ஏளனமாய் பேசலாம். நீங்கள் பணிபுரிகின்ற இடத்தில் உங்களை இழிவாய் நடத்தலாம். உங்கள் காது கேட்க உங்களை பரியாசம் செய்யலாம். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது சவுலைப் போல, காது கேளாதவர்களைப் போல நடந்து கொள்ளுங்கள். அதுதான் ஞானமான செயல்பாடு. அந்த காரியத்தைக் குறித்து தேவனிடம் ஜெபித்து விட்டு விடுங்கள். உங்களை குற்றப்படுத்தி பேசுகின்ற நபர்களை நீங்கள் எதிர்த்து கேட்டால், உங்கள் மேலுள்ள கடவுளின் அபிஷேகம், அழைப்பு, சமாதானத்தை இழக்க நேரிடும். பின்பு அவ்வாறு கேட்டதற்காக உங்கள் மனம் வருந்த நேரிடும். பன்றிகள் முன்பு முத்துக்களை போடாதீர்கள் என்று வேதம் சொல்கிறது. 'துஷ்டரைக் கண்டால் தூரவிலகு' என்பது பழமொழி. அதனால் தீமையான மனிதர்களை விட்டு விலகுங்கள். ஆமென்.
- R. சலோமி
ஜெபக்குறிப்பு:-
VBS ல் கலந்து கொண்ட சிறுவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதை கிரியை செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864