By Village Missionary Movement
Friday, 20-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 20.06.2025
எலும்புகள் உயிரடையுமா?
"அவர் என்னை (எசேக்கியாவை) நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்;..." - எசேக். 37:3
போதகர் ஒருவர் தனது சபையில் அறிவிப்பு ஒன்றைக் கொடுத்தாராம். அது என்னவென்றால், இன்று மாலை 6 மணிக்கு நமது 'சபையின் அடக்க ஆராதனை' நடைபெறும் என்று! எனவே சபையார் யாவரும் தவறாமல் அடக்க ஆராதனையில் பங்கு பெறுங்கள் என்று கூறினாராம். சபையாருக்கு ஒரே அதிர்ச்சி. சபைக்கு அடக்க ஆராதனையா? சபை மரித்துவிட்டதா? என்ற கேள்விக்குறியோடு சென்றனர். மாலை 6 மணி ஆனதும், சபையார் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் சபையில் கூடி விட்டனர். அவர்கள் முன்னால் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. போதகர் ஆராதனையை ஆரம்பித்தார். சபையாரைப் பார்த்து இறுதி அஞ்சலி செலுத்துபவர்கள் வரிசையாய் முன்னே வாருங்கள், அஞ்சலி செலுத்திய பின் அடக்கம் செய்ய புறப்படுவோம் என்றார். சபையார் இறுதி அஞ்சலி செலுத்தும் படி முன்னே சென்றனர். மிகுந்த ஆர்வமுடன் சவப்பெட்டியை குனிந்து பார்த்தனர். சபையை எப்படி போதகர் சவப்பெட்டிக்குள் வைத்தார் என்ற கேள்வியோடு அதை பார்த்தவர்கள் அதிர்ச்சியுற்று, கண்களில் கண்ணீர் நிறைந்தவராய் முகத்தை மூடிக்கொண்டு தங்கள் இருக்கைக்குச் சென்றனர். காரணம் என்ன தெரியுமா? சவப்பெட்டியில் போதகர் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைத்திருந்தார். இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஒவ்வொருவரும் சவப்பெட்டியை உற்றுப் பார்த்த போது அவர்கள் முகமே கண்ணாடியில் தெரிந்தது.
உடனே அதற்கு விளக்கம் தந்தார் போதகர். "சபை என்பது நீங்கள் தான்" நீங்கள் எல்லோரும் அனலுமில்லாமல், குளிருமில்லாமல், கர்த்தருக்கும் உங்களுக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்தேன். அதை உங்களுக்கு உணர்த்தவே இந்த முடிவுக்கு வந்தேன் என்று கூறினாராம்.
எசேக்கியேல் தீர்க்கதரிசியைக் கர்த்தர் ஆவிக்குள்ளாக்கி, வெளியே கொண்டு போய், எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி அவரை நோக்கி மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார். அதற்கு எசேக்கியேல், கர்த்தராகிய ஆண்டவரே, "தேவரீர் அதை அறிவீர்" என்றார்.
அன்புக்குரியவர்களே, நாம் சரீர நன்மைகளைப் பெற்றுக்கொண்டு ஆவிக்குரிய வாழ்வில் உலர்ந்த நிலையில் இருந்தாலும், உங்கள் காய்ந்த எலும்புகளை உயிரடைய செய்ய தேவன் ஒருவரால் மாத்திரமே கூடும். உயிரற்று போய் கிடக்கும் ஆத்துமாவையும், சபையையும் மறுபடியும் உயிரடைய செய்து, நாம் நிலைத்து நிற்கும்படி செய்வார். அல்லேலூயா! ஆமென்.
- Mrs. D.சுதா தேவபாஸ்கர்
ஜெபக்குறிப்பு:-
“இயேசுவின் சந்ததி" என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சி மூலம் சிறுபிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864