By Village Missionary Movement
Thursday, 05-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 05.06.2025
தேவனுக்கு பிரியமாயிருக்க...
"மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்" - ரோமர் 8:8
மனிதனில் இருவகை சிந்தைகள் கிரியை செய்கின்றன. ஒன்று தேவனுக்கும், அவருடைய வார்த்தைகளுக்கும் கீழ்ப்படியக்கூடியது. மற்றொன்று தேவனுக்கு கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. முதல் சிந்தை ஆவியின் சிந்தை, இரண்டாவது சிந்தை மாம்ச சிந்தை. மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகையாகும். எப்படி மரணமும் - ஜீவனும், யுத்தமும் - சமாதானமும், கீழ்ப்படிதலும்-கீழ்ப்படியாமையும் ஒன்றுக்கொன்று எதிரானவைகளோ அதைப்போலவே ஆவியின் சிந்தையும், மாம்ச சிந்தையும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள். ஆவியின் சிந்தையுடன் வாழ்பவர்கள், தேவனைப் பிரியப்படுத்துகிறவர்கள். மாம்ச சிந்தை உள்ளவர்களால் தேவனைப் பிரியப்படுத்தமுடியாது. மாம்சத்தின் கிரியைகள் குறித்து கலாத்தியர் 5:19-21 வரை உள்ள வசனங்களில் காணலாம்.
கிறிஸ்துவின் ஆவி நம்மில் வாசமாயிருந்தால், நாம் மாம்ச சிந்தை உடையவர்களாயிராமல், ஆவியின் சிந்தை உடையவர்களாயிருப்போம். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல என்று வேதம் கூறுகிறது. (ரோமர் 8:9)
பழைய ஏற்பாட்டு காலத்தில், அந்நிய தேசத்தில் வாழ்ந்த யோசேப்பு, பாவ சிற்றின்பத்திற்கு இடம் கொடாமல், "தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி?" என்று தேவனைப் பிரியப்படுத்தும் ஆவியின் சிந்தையோடு வாழ்ந்தார். தானியேல், ராஜாவின் போஜனத்தாலும், திராட்சரசத்தாலும் தீட்டுப்படக்கூடாது என்று உறுதியாக இருந்தார். தரியு ராஜாவைப் பிரியப்படுத்தி உலக மேன்மைகளைப் பெற மறுத்து விட்டார். தேவனுக்குப் பிரியமானவன், பிரியமான புருஷன் என்றெல்லாம் தேவதூதனால் புகழப்பட்டார்.
இந்த புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழ்பவர்களில் யாரெல்லாம் கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவர் தரும் இலவசமான பாவமன்னிப்பையும், இரட்சிப்பையும் பெற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் நித்திய ஜீவனையும், சமாதானத்தையும் தரும் ஆவியின் சிந்தையையும் பெற்று, தேவனுக்கு பிரியமானவர்களாக வாழமுடியும். அவர்கள் நித்திய ஜீவனுக்கு நேராக நடத்தப்படுகிறார்கள். இயேசுவின் சிலுவை மரணத்தை குறித்து தியானிக்கும் போது நாம் ஆவியின் சிந்தை உள்ளவர்களா? மாம்ச சிந்தை உள்ளவர்களா? என்பதை நம்மை நாமே ஆராய்ந்து கண்டு பிடித்து, ஆவியின் சிந்தை பெற்றவர்களாக வாழ்ந்து, தேவனைப் பிரியப்படுத்த நம்மை முற்றிலுமாக அர்ப்பணிப்போமாக.
- Mrs. கீதா ரிச்சர்டு
ஜெபக்குறிப்பு:-
ஏற்கனவே செயல்பட்டு வரும் டியூஷன் சென்டருக்கு வரும் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864