By Village Missionary Movement
Tuesday, 03-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 03.06.2025
தெருவுக்கு வா
"சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்" - அப். 8:4
ஒரு முறை கடலில் சிக்கி தவிப்பவர்களை பாதுகாக்க 'உயிர்காக்கும் மீட்பு குழு' ஒன்று அமைக்கப்பட்டது. ஆரம்ப நாட்களில் அந்த மீட்புக் குழுவின் வேலைகள் தன்னலமற்றதாக மிகவும் அருமையாக இருந்தது. ஒரு காலக்கட்டத்தில் பெரிய கட்டிடங்களை கட்டி தங்களுடைய சாதனைகளை குறித்த படங்களை சுவரில் மாட்டி வைத்து, தங்களை பெருமைபடுத்திக் கொண்டார்கள். ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் மாறிப்போனது. கிட்டத்தட்ட இதுபோலதான் இன்றைய திருச்சபைகளும் காணப்படுகின்றன.
பாவத்திலும், சாபத்திலும் சிக்கி நரகத்துக்கு நேராய் போய்க் கொண்டிருக்கும் மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்காமல், அந்தக் காலத்தில் தாங்கள் செய்தவைகளை குறித்த பெருமை பாராட்டும் கண்காட்சி மண்டபங்களாக இன்றைய சபைகள் காணப்படுகிறது. ஜனங்களைத் தேடி கிராமங்களிலும், தெருக்களிலும் இறங்கி வந்து சுவிசேஷத்தை அறிவிப்பதை தான் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். சமீப நாட்களாக என் இருதயத்தில் ஆண்டவர் திரும்பத் திரும்ப உணர்த்துகின்ற செய்தி இதுவே ஆகும். இயேசுவைப் பற்றி புறஜாதி மக்களுடன் பேசுவதற்கு சபைகள் தெருவுக்கு வர வேண்டும். அப்படி தெருவுக்கு வர மனதில்லாத சபைகளை (கிறிஸ்தவர்களை) ஆண்டவரே தெருவுக்கு கொண்டு வந்து விடுவார் என திட்டமாய் பேசிக் கொண்டிருக்கிறார். சுவிசேஷத்தை பிரசங்கிப்பது நம் மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. "சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ" என்ற பவுலின் வார்த்தைகளை நாம் மறந்து விடக்கூடாது.
(1 கொரி. 9:16)
ஆதித்திருச்சபையில் சுவிசேஷம் அறிவிக்க வேண்டிய கிறிஸ்தவர்கள் அதை மறந்து போனவர்களாக ஜெபிப்பதையும், வேதத்தை போதிப்பதையும் மட்டுமே பிரதானமாய் கொண்டிருந்தார்கள். ஆண்டவர் அவர்களை சிதறடித்து, புறஜாதி மக்களை சந்தித்து சுவிசேஷம் அறிவிக்க அனுப்புகிறதை வசனத்தில் காணலாம். ஆம், ஆதி திருச்சபை தோன்றின நாட்களில் வெளியேயுள்ள மக்களை சந்திப்பதை விட நான்கு சுவர்களுக்குள் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு பிரசங்கம் பண்ணுவதையே விசேஷமாக எண்ணினார்கள். இதன் விளைவு சபைகளுக்குள் கடுமையான உபத்திரவம் வந்து, சபைகள் சிதறடிக்கப்பட்டது. சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள்.
ஜனங்களை நேரடியாக சந்தித்து, ஊழியம் செய்வதையே ஆண்டவர் நம்மிடம் விரும்புகிறார் என்று வேதம் நமக்கு கூறுகிறது. புறஜாதி மக்களை சந்திக்காமல் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் ஊழியம் செய்யும் சபைகளை தெருவுக்கு கொண்டு வர தேவன் சித்தமாயிருக்கிறார். அவருடைய அன்பின் நற்செய்தியை கிராமங்களில், தெருக்களில் வீடு வீடாகச் சென்று
அறிவிப்பதையே தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கின்றார். அதை செய்யும்படி நம்மை அர்ப்பணிப்போமா?
- Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:-
மிஷனெரி பிள்ளைகளின் கல்வி தேவைகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864