By Village Missionary Movement
Wednesday, 28-May-2025இன்றைய தியானம்(Tamil) 28.05.2025
நிலைத்து நிற்பது
"...நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ?..." - யோபு 2:9
நவீன் கர்த்தரை அறியாத குடும்பத்தில் பிறந்து, கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தேவன் மீது மிகுந்த விசுவாசம் வைத்திருந்தார். ஏழைக்குடும்பம் என்பதினால் அன்றாட தேவைகளுக்கு கூட மிகுந்த கஷ்டம்தான். ஆனால் இவரது விசுவாசம் தேவன் மீது என்பதினால் தேவன் இவர்களை கைவிடாது ஒவ்வொரு நாளும் அற்புதமாய் தேவைகளை சந்தித்தார். நவீனுக்கு திடீரென ஒரு நாள் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது. மருத்துவரும் இவரை சோதித்து பார்த்த போது இவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. பெரிய அளவில் மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கு இவரிடம் போதுமான அளவு பணம் இல்லை. ஆனால் தேவன் சுகம் கொடுப்பார் என்கிற விசுவாசம் அவருக்குள் இருந்ததினால் கடைசிவரை நிலைத்து நின்று தேவனிடம் சுகத்தை பெற்றுக்கொண்டார்.
பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் யோபு என்ற பக்தனை நாம் அனைவரும் அறிவோம். மிகுந்த பண பலம் மற்றும் தேவன் மீது கடுமையான விசுவாசம் கொண்டவர். இவர் ஒரு நாள் சாத்தானால் சோதிக்கப்பட்டார். சாத்தான் கர்த்தரிடம் அனுமதிப்பெற்றே யோபுவை சோதித்தான். யோபுவின் ஆசீர்வாதங்கள் எல்லாம் ஒரு நாள் பறிபோனது. அவனுடைய பிள்ளைகளும் மரித்துப்போனார்கள். ஆனாலும் யோபு கர்த்தரை விட்டு பின்வாங்கவும் இல்லை. கர்த்தரைப்பற்றி குறை சொல்லவும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தேவன்மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்து நின்றார். ஆனால் யோபுவிற்கு கொஞ்சம் கூட தெரியாது நான் இழந்த ஆசீர்வாதத்தையெல்லாம் ஒரு நாள் பெற்றுக்கொள்வேன் என்று. யோபு இழந்த ஆசீர்வாதங்களை எல்லாம் இரட்டிப்பாய் சுதந்தரித்துக்கொண்டார்.
பிரியமான சகோதர, சகோதரிகளே! வேதத்தில் விடாபிடியாய் நிலைத்து நின்று பரலோக நன்மைகளையும், மேன்மைகளையும் அடைந்த அநேகரை பார்க்க முடியும். கிறிஸ்தவ வாழ்க்கையில் பிரச்சனைகளும், போராட்டங்களும் வருவது இயல்புதான். கர்த்தரிடம் போராட்டங்களை கடந்து செல்வதற்கு பெலன் கேட்கும் போது நிச்சயம் போராட்டத்தை நாம் மேற்கொள்ள முடியும். மாறாக, தேவனை விட்டும், விசுவாசத்தை விட்டும் பின் வாங்கிப்போவோம் என்றால் ஜெயமுள்ள வாழ்க்கை வாழ முடியாது. கிறிஸ்துவுக்குள் நிலைத்து நிற்போம் என்றால் கிருபைகளை பெற்றுக்கொண்டு கனிகொடுக்கிற வாழ்க்கை வாழலாம். அல்லேலூயா!
- Sis. ரஞ்சிதா கிரேஸ்
ஜெபக்குறிப்பு:-
நம் வில்லேஜ் டிவியில் ஒளிபரப்பப்படும் VBS நிகழ்ச்சிகள் மூலம் அனேக சிறுவர்கள் கர்த்தரை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864