By Village Missionary Movement
Thursday, 22-May-2025இன்றைய தியானம்(Tamil) 22.05.2025
சிலுவையின் அன்பு
"முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்" - எபேசியர்2:13
கம்யூனிச தேசங்களுக்கும் அமெரிக்க தேசத்திற்குமிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ருமேனிய தேசத்தில் வெளியரங்கமாய் சுவிசேஷம் அறிவிக்கத்தடை இருந்தும், அமெரிக்க தேசத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் இரகசியமாய் சில ஊழியங்கள் செய்யும்படி சென்றிருந்தார். ஒரு நாள், கடும் குளிரிலே ஆள் நடமாட்டம் அதிகமில்லாத தெரு ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மனிதனின் விசில் சத்தம் அவரை ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அவர் "மா பரிகாரியான இயேசு" என்ற பாமாலை பாடலை விசில் அடித்தபடி பாடி சென்று கொண்டிருந்தார்.
கிறிஸ்துவை மறுதலிக்கும் தேசத்தில் இப்படி ஒரு நபரா என மகிழ்ச்சியடைந்து, அம்மனிதனை பின் தொடர்ந்தார். யாரும் பார்த்து விட்டால் பிரச்சனை வரலாம் என்பதால் சிறிது தூரம் அமைதியாய் சென்ற அவர் பின் அந்த பாட்டை இவரும் விசில் அடிக்க ஆரம்பித்தார். அந்த பாட்டைக் கேட்டவுடன் அந்த ருமேனியர் ஆச்சரியத்தோடு திரும்பி வந்து, ஊழியரை கட்டிப்பிடித்து கொண்டு தனது மொழி அவருக்கு புரியவில்லை என்பதை அறிந்து தனது இருதயத்தின் மேல் கைகளை வைத்தார். பின் கைகளை வானத்திற்கு நேராய் உயர்த்தி சிலுவை அடையாளத்தை வரைந்து காண்பித்தார். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியோடு மொழி, கலாச்சாரம் என ஏதேதோ வித்தியாசத்தில் வாழும், ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத அவ்விருவரும் ஒரு சில நிமிடத்தில் சிலுவை அன்பினால் இணைக்கப்பட்டனர்.
அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியருக்கு எழுதின நிருபத்தில் இப்படியாக குறிப்பிடுகிறார். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் அவருடைய இரத்தத்தினாலே சமீபமானீர்கள் என்று. சிலுவையின் அன்புக்கு தூரமாய் இருந்த நம்மை கர்த்தர் இரட்சித்து, அவரோடு ஒன்றாக இணையும்படியான பாக்கியத்தை நமக்கு கொடுத்துள்ளார். நமக்குள்ளிருந்த பாவம் என்னும் இருளை விட்டு, வெளிச்சத்தில் களிகூர சிலுவையின் அன்பு நம்முடைய இருதயத்தில் ஒவ்வொருநாளும் ஊற்றப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
அருமையானவர்களே! முன்னே நாம் கிறிஸ்துவை அறியாமல் இருந்த நாட்களில் சிலுவைக்கு தூரமாய் இருந்தோம். நமக்கு யாரோ ஒருவர் இயேசுவின் அன்பை அறிவித்ததின் விளைவாக அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த சிலுவையின் அன்புக்கு அநேகர் இன்னும் தூரமாகவே உள்ளனர். அப்படிப்பட்டதான ஜனங்களுக்காக யார் உத்திரவாதம் எடுப்பார்கள்? பல மொழி பேசும் மக்களும், பல இன மக்களும் கிறிஸ்துவுக்கு தூரமாகவே உள்ளனர். இன்று நீங்களும், நானும் கிறிஸ்துவின் அன்பு என்கிற பாலத்தால் ஒன்றாய் இணைந்தது போல, அநேகரை அவரின் அன்பை கண்டடையச்செய்வோம்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
VBS ஊழியம் செய்கிறவர்கள் அர்ப்பணிப்போடு, உண்மையாய் செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864