By Village Missionary Movement
Saturday, 10-May-2025இன்றைய தியானம்(Tamil) 10.05.2025
தேவன் இரக்கம் உள்ளவர்
"...தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?" - லூக்கா 18:7
ஒரு முறை இங்கிலாந்து நாட்டிற்குச் செல்லும் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது. அதிலிருந்த எல்லாரையும் படகில் ஏற்றி அனுப்பினார்கள். அந்த படகில் இருந்த 12 பெண்களில் ஒருவர் கிறிஸ்துவின் பணியை செய்து வந்த திருமதி. மார்க்ரெட் வில்லியம்ஸ் ஆவார். மற்ற 11 பெண்களும் உணவு, குடிநீர் இன்றி உயிர் பிழைக்கும் நம்பிக்கையின்றி, இருந்த போது சகோதரி மார்க்ரெட் அவர்கள், " பவுல், சீலா இருவரும் சிறையில் இருக்கும் போது துதித்து, கர்த்தரின் செயலைக் கண்டார்கள். அதுபோல நாமும் துதிப்போம்" என்று சொல்லி, எல்லோரையும் துதிக்க வைத்தார்கள். இவர்களின் துதியின் பாடல் சத்தம் கேட்டு, ஒரு படகு இவர்களை காப்பாற்ற வந்தது. படகில் இருந்த அனைவரும் துதிப்பதினால், இக்கட்டில் தேவனை நோக்கிப் பார்ப்பதினால் கிடைக்கும் பலனைப் பார்த்து நன்றி செலுத்தினார்கள்.
இதைப் போலவே இக்கட்டான நேரத்திலும் தேவனை துதித்துப்பாடிய ஒரு தேவமனிதன் உண்டு. தாவீது தேவனால் ராஜரீக அபிஷேகத்தை பெற்றவன் என அறிந்திருந்த பின்னும், சவுல் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தாவீதை கொலை செய்யும் எண்ணத்துடனே துரத்தினான். ஆனால் தாவீதோ தனக்கு வந்த எல்லா ஆபத்திலும் கர்த்தரை நோக்கி பார்த்தார், "என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்" (சங்கீதம் 63:4) என ஓயாமல் கர்த்தரைப் பாடி துதித்தார். தான் இருக்கும் இடம் வனாந்தரமோ, குகையோ எதுவானாலும் தேவனை துதித்து தேவதயவையும் இரக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
ஆம், இன்று நாம் சென்று கொண்டிருக்கும் உலக வாழ்க்கையில் தேவ தயவை, ஒத்தாசையைப் பெற, பிரச்சனைகள், போராட்டங்கள் மத்தியிலும் பாடித்துதித்து வேண்டிக் கொள்ளும் போது தேவன் உதவுவதை நாம் பார்க்க முடியும். தேவன் நன்மை செய்கிறவர், இரக்கம் நிறைந்தவர் உதவாமல் இருப்பாரோ, சீக்கிரத்தில் உதவுவார் என்று இயேசு கூறியுள்ளார்.
எபி. 11:6 ல் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். நிச்சயமாக நமது தேவன், நமது வேண்டுதல்கள் அனைத்திற்கும் பலன் அளிப்பார். ஆமென்.
- Mrs. பாத்திமா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
ஒரு கிராமத்தில் VBS எடுக்க ரூ. 5000/-கொடுக்கிறவர்களை தேவன் எழுப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864