By Village Missionary Movement
Friday, 09-May-2025இன்றைய தியானம்(Tamil) 09.05.2025
முத்திரையாக பெற்ற பரிசுத்த ஆவியானவர்
"...நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்..." - எபேசியர்4:30
அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்பவர், அழுக்கு படிந்த ஒரு சிறுவனுடைய முகத்தைப் பார்த்து, உன் முகத்தை கழுவி வந்தால் உனக்கு 25 சென்ட் பணம் தருகிறேன் என்றார். அந்த சிறுவன் முகம் கழுவி வந்ததும் 25 சென்ட் பணத்தை கொடுத்து, இதை என்ன செய்வாய் என்றார். அவன் உங்கள் முடியை வெட்டி வருவீர்களானால் உங்களுக்கு தந்துவிடுவேன் என்றான். இன்று நாம் மற்றவர்களுடைய குறைகளையே பார்க்கிறோம், நம்முடைய குறைகளை பார்ப்பதில்லை. யோவான் 16:8 ல் "பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்" என்று கூறப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவர் நம்மை கண்டித்து உணர்த்த நம்மோடு இருக்கிறார்.
தாவீது ராஜா பரிசுத்த ஆவியானவர் தன்னோடு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று வேண்டினார். 51 ம் சங்கீதத்தில் பரிசுத்தஆவி நிரந்தரமாக இருக்கும் போது பாவம் செய்ய முடியாது என்று உறுதியாய் நம்பினார். 1 கொரிந்தியர் 3:16 ல் "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? என்கிறார் பவுல்.
நாம் தேவனுடைய ஆலயம் (ஜெப வீடு) என்பதை மறந்து, மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டிய நாம், மற்றவர்களை நேசியாமல் இருக்கிறோம். பேதுருவுக்கு கொர்நேலியுவை நேசிக்க முடியவில்லை, தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல என்பதை விளக்க அவருக்கு ஒரு தரிசனம் தேவைப்பட்டது. இன்று நாம் பட்சபாதம் உடையவர்களாய் தேவனை, பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துகிறோம். நல்ல சமாரியனாக செயல்பட வேண்டிய நாம் லேவியனாக, ஆசாரியனாக விலகி செல்கிறோம். பரிசுத்த ஆவியை நாம் துக்கப்படுத்தினால், அவர் நம்மை விட்டு விலகி சென்றுவிடுவார். அவர் விலகியதை அறியாத சிம்சோன் போல் நாம் காணப்படுவோம். பரிசுத்த ஆவியை உடையவர்களாக அறியப்பட்ட தானியேலைப் போல, யோசேப்பை போல, எனோக்கைப் போல, நோவாவைப் போல தேவனோடு சஞ்சரிக்கிறவர்களாக இருப்போமானால் அவர் நம்மோடு இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.
பரிசுத்த பவுல் அப்போஸ்தலரைப் போல் "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" என்று சொல்லுவோம். இந்த ஒரு அறிக்கை நாம் இவ்வுலகத்துக்கு உரியவர்கள் அல்ல, சாவு நிச்சயம், சாவின் வழியாய் நித்திய ஜீவனாகிய கிறிஸ்துவை பெற்றுக்கொள்ள பரலோகம் செல்வேன் என்கிற நினைவோடு காணப்படுவோம். பரலோகம் அழைத்து செல்பவர் பரிசுத்த ஆவியே! ஆமென்.
- Rev. D. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
VBS ஊழியத்திற்கு தன்னார்வமாய் செயல்படுகிறவர்களைத் தேவன் நம்மோடு இணைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864