By Village Missionary Movement
Tuesday, 06-May-2025இன்றைய தியானம்(Tamil) 06.05.2025
இயன்றதைச் செய்
"இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்;…" - மாற்கு 14:8
இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில் ஒரு ஸ்திரீ விலையேறப் பெற்ற நளதம் என்ற உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டு வந்து அதை உடைத்து அந்தத் தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள். அப்பொழுது சிலர் இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்? இதை முந்நூறு பணத்துக்கும் அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி அவளைக் குறித்து முறுமுறுத்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம் அவளை விட்டுவிடுங்கள். ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள் என்றார். அவர் ஏன் அவள் செய்கையைப் பாராட்டி அவள் பணிவிடையை ஏற்றுக் கொண்டார்? இயேசு கிறிஸ்து மீது அவள் கொண்ட அன்பினால் தன்னிடமிருந்த சிறந்த ஒன்றை காணிக்கையாக அவருக்குப் படைக்க ஆயத்தமாயிருந்தாள். அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.
தொற்காள் ஒரு விதவையாக இருந்தாள். ஆனாலும் தனக்குத் தெரிந்த கைத்தொழிலாகிய தையல் மூலம் அநேக ஸ்திரீகளுக்கு உடைகள் தைத்துக் கொடுத்தாள். தன்னால் இயன்ற காரியங்களை ஏழை, எளிய மக்களுக்குச் செய்தபடியால், மரித்த பின்பும், பேதுரு என்ற சீஷனால் ஜெபித்து உயிர்ப்பிக்கப்பட்டாள். நீங்களும் உங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்குச் செய்கிறீர்களா? ஆசிரியப் பணி செய்கிறவர்கள் ஏழை மாணவ, மாணவிகளுக்கு, டியூஷன் எடுத்து அவர்களும் கல்வியில் முன்னேற உதவி செய்யலாம். வேலைகள் ஒன்றும் செய்ய முடியாதவர்கள் கூட ஜெபிக்கும் ஊழியத்தைச் செய்யலாம். பிறருக்காக, தேசத்துக்காக, சபைகளுக்காக, ஊழியர்களுக்காக, ஊழிய ஸ்தாபனங்களுக்காக, இரட்சிக்கப்படாத மக்களின் இரட்சிப்புக்காக மன்றாடி ஜெபிக்கலாம். "இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்" என்று ஆண்டவரும் நிச்சயம் பாராட்டுவார்.
வேதத்தில், தேவாலயத்தில் இரவும் பகலும் உபவாசித்து ஜெபித்து வந்த விதவைத் தாயாரின் பெயர் அன்னாள். எவ்வளவு பெரிய பாக்கியம் பெற்றாள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாலகனாய், ஆலயத்துக்கு மரியாளால் எடுத்து வரப்பட்ட பொழுது, இயேசுவைக் கண்டு ஸ்தோத்தரித்தாள். அதுபோலவே, நாமும் நம்மால் இயன்றதை இயேசுவுக்காகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
அன்பான சகோதர, சகோதரிகளே, உங்களால் இயன்றதை இயேசுவுக்கென்று செய்ய முன்வருவீர்களா? ஒருவேளை நாம் செய்யும் காரியம் நமது பார்வையில் மிகச் சிறியதாகத் தோன்றும் ஆனால் ஆண்டவரின் பார்வையில் அது பெரியதாகக் காணப்படும். ஆகவே தேவையுள்ள ஜனங்களுக்கு எப்பொழுதெல்லாம் உதவும்படி வாய்ப்பு உங்கள் முன் காணப்படுகிறதோ, அப்பொழுதே இயன்றதை முழுமனதோடு செய்யுங்கள். ஆமென்!
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:-
6,000 கிராமங்களில் VBS ஊழியம் செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864