By Village Missionary Movement
Thursday, 20-May-2021இன்றைய தியானம்(Tamil) 20-05-2021
காலியான கல்லறை
“இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார்....” – யோவான் 20:15
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்து, பின்பு அவரை ஒரு புதிய கல்லறையிலே வைத்தார்கள். மூன்றாம் நாளிலே இயேசுவின் சரீரத்திற்கு சுகந்த வர்க்கத்தையிடும்படி மகதலேனா மரியாளும் மற்ற சில ஸ்திரீகளும் கல்லறையினிடத்திற்கு வந்தபோது, கல்லறையை அடைத்திருந்த கல் திறக்கப்பட்டிருப்பதையும் இயேசுவின் சரீரம் இல்லாமல், கல்லறை காலியாக இருப்பதைக் கண்டும் திடுக்கிட்டார்கள். மற்றவர்கள் வீட்டிற்கு திரும்பி விட்டாலும், மகதலேனா மரியாள் மட்டும் திரும்பி போகாமல் கல்லறையின் வாசலில் நின்று அழுது கொண்டிருந்தாள். அப்பொழுது இயேசு தோன்றி, “ஸ்திரீயே ஏன் அழுகிறாய்” என்றார். அவள் அவரை தோட்டக்காரர் என்று எண்ணி, “ஐயா அவரை வைத்த இடம் தெரியுமானால் சொல்லும். நான் உடனே போய் அவரை எடுத்துக் கொள்ளுவேன்” என்றாள். என்ன அன்பு பாருங்கள்! இவளோ ஒரு ஸ்திரீ, வாலிப வயதில் மரித்த இயேசுவின் சரீரத்தை எப்படி தனியாக தூக்க முடியும்? ஆனாலும் அவர் மேலுள்ள அபரிமிதமான அன்பினால் நானே போய் அவரை எடுத்துக் கொள்ளுவேன் என்றாள். உடனே இயேசு அவளுக்குத் தன்னை வெளிப்படுத்த சித்தமானார். உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் காணும் சிலாக்கியம் மகதலேனா மரியாளுக்குத்தான் கிடைத்தது. மூத்த சீஷனாகிய பேதுருவுக்கோ, அன்பின் சீஷனாகிய யோவானுக்கோ கிடைக்கவில்லை. இயேசுவை முதலில் தரிசிக்கும் அளவுக்கு மகதலேனா மரியாள் அவரிடம் அவ்வளவாய் அன்பு வைத்திருந்தாள். அந்த நிமிடம் முதல் நம்பிக்கையின்றி திகிலோடிருந்த அவளது சிந்தையில் புது நம்பிக்கை துளிர்த்தது, அவளுடைய வெறுமை மாறியது.
அவரது கல்லறை இன்னும் காலியாகவே உள்ளது. அதுவே, அவர் வல்லமையோடே உயிர்த்தெழுந்ததற்கு சாட்சியாக இருக்கிறது. பலவித பிரச்சனைகளால் மன துக்கத்தோடு அழுது கொண்டிருக்கிறீர்களா? அவர் உயிரோடெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பது உண்மையானால் எனக்கு ஏன் இந்தப் பாடுகள்? உபத்திரவங்கள் என்று கலங்குகிறீர்களா? கண்ணீர் வடிக்கிறீர்களா? உங்கள் கண்ணீரைத் தேவன் காண்கிறார். ஸ்திரீயே ஏன் அழுகிறாய்? என்று கேட்டு, மகதலேனா மரியாளின் கண்ணீரைத் துடைத்த இயேசு, இன்றும் நம்மண்டையில் நிற்கிறார். நம்மை ஆறுதல்படுத்துகிறார், சந்தோஷம் தருகிறார். நாமும் மகதலேனா மரியாளைப் போல முழு உள்ளத்தோடும், முழு அன்போடும் அவரைத் தேடினால், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து நம் கண்ணீரையும் துடைப்பார்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி ஈஸ்டர் தினத்தன்று மட்டும் நினைவுகூர வேண்டிய செய்தியல்ல. ஒவ்வொரு நாளும் நம் உலர்ந்த வாழ்வை உயிர்பெற வைக்கும் ஜீவனுள்ள செய்தி.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
12 மிஷனெரிகள் மூலமாக அந்தந்த மாநிலங்களில் அர்ப்பணிக்கப்பட்ட 500 மிஷனெரிகளை தேவன் எழுப்பித் தர ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250