By Village Missionary Movement
Thursday, 01-May-2025இன்றைய தியானம்(Tamil) 01.05.2025
இளமை இதோ...
“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை;...” - பிரசங்கி 12:1
வாலிபம் என்பது முழுக்க, முழுக்க மகிழ்ச்சியின் காலம். உடல் வலிமையாக, அழகாக, சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய பருவம். உலகிலேயே அதிக அளவு இளைஞர்கள் இருக்கக் கூடிய நாடாக இந்தியா உள்ளது. ஆண்டவருடைய வசனம் வாலிபர்களுக்கு கூறும் ஆலோசனை என்ன தெரியுமா? வாலிப வயதில், நம்மைப் படைத்தவரை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று! காரணம், நம் நினைவுகளுக்கு இறக்கை கட்டி பறக்கும் தன்மையுண்டு, நடக்காததையும் கற்பனை செய்யும். ஆகவே கர்த்தரை நினைத்தாலே நீ அநேக தவறான காரியத்திலிருந்து தப்பித்துவிடுவாய் என்று ஆலோசனை கூறுகிறது.
"வாலிபனே ! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி." (பிரசங்கி 11:9)
அன்பு பிள்ளைகளே! எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்வதற்கு நாம் அழைக்கப்படவில்லை. நாம் ஆண்டவருடைய பிள்ளைகள், பிரித்தெடுக்கப்பட்டவர்கள். நம்முடைய செயல்களை ஆண்டவர் கவனிக்கிறார். அவை எல்லாவற்றுக்காகவும் ஒரு நாள் ஆண்டவரிடம் நாம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய ஒவ்வொரு பார்வையும், இருதயத்தின் நினைவுகளும், கர்த்தருக்கு ஏற்றதாக உள்ளதா? என நாம் சிந்திக்க வேண்டும். நம்முடைய கையில் உள்ள அலைபேசி, நம்முடைய நேரத்தை எப்படி வீணாக்குகிறது ? உண்மையில் சரியானக் காரணங்களுக்காக மட்டும் அது உங்களிடம் இருக்க வேண்டும். எதிர்பாலினத்தவரோடு உள்ள உங்கள் பேச்சு, நட்பு எல்லைக்கோட்டை தாண்டக் கூடாது. "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்."
(நீதி. 4:23)
அன்பானவர்களே, தேவன் நமக்கு கொடுத்த தரிசனம் சிறுவர்கள், வாலிபர்களை தேவனுக்காய் எழுப்புவது! இவர்கள்தான் நாளைய தலைவர்கள், மிஷனெரிகள், போதகர்கள்... ஆகவே இவர்களுக்காக சிறப்பாக பிரயாசப்பட்டு ஊழியம் செய்வது மிக மிக அவசியம். இவ்வாண்டு அநேக வாலிபர் முகாம்கள் மற்றும் 6000 கிராமங்களில் VBS என பல ஊழியங்களை ஜெபத்துடன் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். அதன்படி இன்று திருமங்கலத்தில் நடக்கும் 20,000 வாலிபர்கள் பங்குபெறும் உபவாசக் கூடுகையில் அநேக வாலிபர்கள் கலந்து கொண்டு தேவனுக்காய் வைராக்கியமுள்ள பிள்ளைகளாய் எழும்ப, இந்திய தேசத்தின் எழுப்புதலுக்கான ஆயுதங்கள் இன்றைய முகாமில் உருவாக ஜெபியுங்கள்.
- Rev. எலிசபெத்
ஜெபக்குறிப்பு
இன்று நடைபெறும் வாலிபர் உபவாசக் கூடுகையின் ஆரம்பம் முதல் முடிவு வரை தேவ ஆளுகை இருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864