By Village Missionary Movement
Wednesday, 23-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 23.04.2025
எளியவன் மறக்கப்படுவதில்லை
"எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை" - சங்கீதம் 9:18
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்!
ஜோசப் இரண்டு கைகளையும் இழந்த ஒரு மாற்றுத்திறனாளி, தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறியவர். தன்னுடைய பணி காரணமாக வெளியூருக்கு செல்ல விமானத்தில் ticket போட்டிருந்தார். அந்த நாள் வந்த போது விமானத்தில் சென்று அமர்ந்திருந்தார். அவரது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஜோசப்- ஐ கண்டதும் விமான பணிப்பெண்ணை அழைத்து, இவரது அருகில் நான் உட்கார மாட்டேன் என்று கூறினாள். பணிபெண்ணும் என்ன செய்வதென்று தெரியாமல், அதை கேப்டனிடம் கூறினாள்.
சில நிமிட ஆலோசனைக்குப் பின்னர் அந்த பணிப்பெண் அந்த பெண்ணிடம் வந்து முதல் முறையாக சாதாரண ticket எடுத்தவரை VIP ticket க்கு மாற்றுகிறோம், என்று கூறினாள். இதைக்கேட்டவுடன் அந்த பெண்ணிற்கு மிகுந்த மகிழ்ச்சி. தான் VIP ticket ல் செல்ல இருப்பதாக நினைத்து மகிழ்ந்தாள்.
ஆனால் பணிப்பெண் ஜோசப்பை பார்த்து " ஐயா நீங்கள் VIP ticket ல் பயணம் செய்யலாம். உங்களுடன் அமர்ந்து பயணம் செய்யும் தகுதி இந்த பெண்ணிற்கு இல்லை" என்று கூறியதும் அந்த பெண் வெட்கி தலைகுனிந்து, தன்னுடைய தவற்றிற்காக வருந்தினாள்.
ஆம், அன்பானவர்களே, ஊனமுற்றவர்களை, சிறுமைப் பட்டவர்களை உலகம் அற்பமாக நினைக்கிறது அல்லவா! தேவன் சிருஷ்டித்த அனைத்து மனிதர்களும் அவருடைய சாயலாய் படைக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளே! வேதத்தில் கூட இரண்டு கால்களும் முடமான யோனத்தானின் குமாரன் மேவிபோசேத்தை, தாவீது அரண்மனைக்கு அழைத்து வந்து, தன்னுடைய பந்தியில் நித்தமும் அசனம் பண்ணுகிறவனாய் வைத்தான் என்று 2 சாமுவேல் 9:13 ல் பார்க்கிறோம்.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் சுற்றி நடந்த போது மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதலையும், சுகத்தையும் கொடுத்ததைப் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் நாமும் கூட மாற்றுத்திறனாளிகளையும் நேசித்து, அவர்களுக்கும் உதவிகளைச் செய்வோம். சங்கீதம் 82:3ல் "ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்" என்றும், சங்கீதம் 112: 9 ல் ஏழைகளுக்கு கொடுத்தவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாமும் கூட நம்மைச் சுற்றிக் காணப்படுகிற உதவியற்றப் பிள்ளைகளுக்கு, நம்மால் இயன்ற உதவியைச் செய்வோமாக! அவர்களுக்கு உரிய கனத்தை கொடுப்போமாக ஆமென்!
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:
வட மாநில மிஷனெரிகளை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864