Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18.04.2025
Share:

By Village Missionary Movement

Friday, 18-Apr-2025

இன்றைய தியானம்(Tamil) 18.04.2025

 

சிலுவையில் மலர்ந்த பூக்கள் 

 

"…அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்" - மாற்கு 15:14

 

அன்பே உருவான ஆண்டவர், சிலுவையில் அறையப்பட்டு குற்றுயிராய் தொங்கும் போது 7 வாக்கியங்களை அடுத்தடுத்து கூறினார். அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூவாய் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கின்றன. அவற்றை பார்ப்போமா?

 

மன்னிப்பு(பூ): இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு வேதனையின் உச்சத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போதும் அவர்களைத் தானும் மன்னித்து, பிதாவும் மன்னிக்கும்படி கெஞ்சினார். நமக்கு யாரும் இவ்வளவு பெரிய தீங்கு செய்யவில்லை. அதனால் யாவரையும் மன்னிப்போம்.

 

இரட்சிப்பு(பூ): தன் பாவத்தை உணர்ந்து உம்முடைய ராஜ்யத்தில் என்னை நினைத்தருளும் என கெஞ்சிய கள்ளனுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார். நாமும் இந்த இரட்சிப்பின் செய்தியை மற்றவருக்கு அறிவிக்கும்படி தேவன் விரும்புகிறார். நாம் எத்தனை பேருக்கு அறிவித்துள்ளோம்?  

 

பராமரிப்பு(பூ): தன்னை பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த தாய் தாங்கொண்ணா வேதனையோடு கதறி அழுவதைக் கண்டு, தன் கடைசி கடமையை நிறைவேற்றும்படி தாயாரை தனக்கன்பான சீஷரிடம் பராமரிக்க ஒப்படைக்கிறார். நாமும் நம்மை பல இன்னல்களுக்கு மத்தியில் வளர்த்தெடுத்த பெற்றோரை கடைசிவரை பராமரிக்க வேண்டும். நமக்கு முன்மாதிரியாய் இயேசு செய்து முடித்துவிட்டாரே!

 

பரிதவிப்பு(பூ): உலகின் ஒட்டுமொத்த பாவமும் இயேசுவின் மேல் சுமர மதியம் 12 மணி முதல் 3 மணி வரை காரிருள் சூழ்ந்தது. பிதாவின் முகம் மறைக்கப்பட்டது. அவர் சொல்லொண்ணா வேதனையில் பரிதவித்தார். நம் வாழ்வில் வரும் ஆவிக்குரிய இருள் மாறி, ஆண்டவரின் முகத்தைக் காண பரிதபித்து ஜெபித்திருக்கிறோமா?

 

தவிப்பு(பூ): கெத்செமனேயில் இரத்தமாய் வேர்வை வெளியேறும் அளவு மனபாரங்கள், சரீரத்திலும் சாட்டையடிகள், குட்டுதல் என பல பாடுகளுக்கு உட்பட்டதாலும் தாகமானார். மேலும் பாவிகளை இரட்சிக்க வந்த அவருக்கு ஆத்துமாக்களைக் குறித்த தாகத்தால், தவித்து தாகமாயிருக்கிறேன் என்றார். ஆம், நாமும் அவரை அறியாதோருக்கு அறிவித்து தேவ தாகத்தைத் தீர்ப்போம். 

 

முடிப்பு(பூ): தேவாதி தேவன் மனுவுரு எடுத்து வந்த நோக்கத்தை நிறைவேற்றி முடித்தார். பவுலும் கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து ஓட்டத்தை முடித்தேன் என்றார். அதே போல் நமக்குக் கொடுக்கப்பட்ட காரியத்தை செய்து முடிக்க கருத்தாய் இருப்போம்.

 

ஒப்படைப்பு(பூ): ஒப்புவிக்கிறேன் என்பதற்கு விலையுயர்ந்த ஒன்றைத் திரும்ப பெற்றுக்கொள்ளும்படி பாதுகாப்பான இடத்தில் கொடுத்து வைப்பதைப் போல் தன் ஆவியை பிதாவிடம் ஒப்படைக்கிறார். இன்று நம் வாழ்வை அவரிடம் ஒப்படைத்து வாழ்கிறோமா?  

 

முழு கிறிஸ்தவ வாழ்க்கையை மூன்று மணி நேரத்தில் ஏழு பூக்களாய் மலரச் செய்தார். நாமும் இப்பூக்களின் நறுமணத்தை வீசி வாழ்வோம்.

- Mrs. வனஜா பால்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

6000 கிராமங்களில் VBS ஊழியம் செய்ய, தேவன் திறந்த வாசலைக் கட்டளையிட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al