By Village Missionary Movement
Wednesday, 16-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 16.04.2025
முட்செடி ஏன்?
"முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்;..." - ஏசாயா 55:13
அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய பட்டணத்தில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய சொந்த நிலத்தை நல்ல தோட்டமாக்க வேண்டுமென்று நினைத்து பல மரக்கன்றுகள், செடிகள் போன்றவற்றை வைத்தார். பார்ப்பதற்கு அழகாக காணப்பட்டது. ஆனால் அந்த தோட்டத்தின் நடுவே ஒரு முட்செடியையும் வைத்தார். இதைப் பார்த்த அநேகருக்கு ஒரு கேள்வி, அழகான பூச்செடிகளும், பழ மரங்களும் பார்ப்பதற்கே கண்களை கவரும் போது ஏன் இந்த முட்செடி? என்று. இதை கேட்ட தோட்டத்தின் உரிமையாளர் சொன்னார், "அதெல்லாம் காரணமாகத்தான் வைத்துள்ளேன்" என்று! ஒரு நாள் வந்தது. இயேசுவை சிலுவையில் அறையப் போகிறார்கள். அவருக்கு ஒரு முள்முடி வைக்க வேண்டும் என்று சொல்லி ஒரு முள்ளைத் தேடி வந்தனர். அது சாதாரண முள் அல்ல, நெற்றியை ஊடுருவி தலைக்குள் பாயக்கூடிய அந்த முள் இந்த பணக்காரரின் தோட்டத்தில் இருப்பதைக் கண்டு எடுத்துச் சென்றனர். இதை கேள்விப்பட்ட இந்த தோட்டக்காரர் வேதனை அடைந்தார். நான் என்றைக்கோ இந்த முட்செடியை எடுத்துப்போட்டிருக்கலாம். அநேகர் சொல்லியும் நான் கேளாமல் போனேன். ஆனால் இப்பொழுதோ இது என் தேவனை காயப்படுத்துகிறதே என்று சொல்லி அழுதார்.
இயேசு 12 பேரைத் தெரிந்துகொண்டதன் நோக்கம் அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம் பண்ணும்படியாகவுமே. இந்த 12 பேரில் ஒருவர் தான் அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் என்பவர். இந்த யூதாஸ் பண ஆசையினால், 30 வெள்ளிக்காசிற்காக அவரைக் காட்டிக் கொடுத்தான். மூன்றரை ஆண்டு கூடவே இருந்தவன்தான் முள்ளாக செயல்பட்டுவிட்டான். நெருக்கமாயிருந்த பேதுரு தான் அவரை மறுதலித்துவிட்டார்.
இதை வாசிக்கிற அன்பான சகோதரனே, சகோதரியே, யூதாஸ் ஒரு முறை மட்டுமே இயேசுவைக் காட்டிக்கொடுத்தான். நாமோ அனுதினமும் நம்முடைய நடவடிக்கை மற்றும் வார்த்தையால் ஆண்டவரை தினமும் மறுதலிக்கிறோமோ? அவர் நம்மை கனி கொடுக்கும்படியாக தெரிந்துகொண்டுள்ளார். நமக்கென்று ஒரு ஸ்தானத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் நாமோ, ஒவ்வொரு முறையும் இயேசுவைக் காட்டிக்கொடுத்து, நம்முடைய ஸ்தானத்தையும் இழந்து முள்செடியாகவே வாழ்ந்து வருகிறோமோ? நமக்கென்று கொடுக்கப்பட்ட வாழ்வு ஒரு வாழ்வுதான். அந்த ஒரு வாழ்வை அவருக்கென்று அர்ப்பணித்து நம்மிடம் காணப்படும் முட்செடி போன்ற சுபாவத்தை களைந்துவிட்டு, தேவதாரு விருட்சமாய் வாழ பிரயாசப்படுவோமா?
- Mrs. பூவிதா எபிநேசர்
ஜெபக்குறிப்பு:
கண்மணி பிள்ளைகள் ஜெபத்திட்டத்தில் இணைந்துள்ள பிள்ளைகள் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864