By Village Missionary Movement
Friday, 11-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 11.04.2025
ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன்
"கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்" - சங்கீதம் 139:1
ஒரு முறை இயேசுநாதர் ஆலயத்துக்குச் சென்று, தன் கண்களை ஏறெடுத்தபொழுது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். ஒரு ஏழை விதவையும் தன் காணிக்கையைப் போட்டாள். அவள் போட்டது தன்னிடமிருந்த வெறும் இரண்டு காசுகள் மட்டுமே. ஆனாலும் அவள் மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாய் போட்டாள் என்ற பாராட்டையும் பெற்றாள்.
அப்போஸ்தலருடைய காலத்திலே அனனியா, சப்பீராள் தம்பதியினர் தங்கள் காணியாட்சியை விற்று அதிலே ஒரு பங்கை வஞ்சித்து தங்களுக்கென்று வைத்துக் கொண்டு, மீதியை அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தார்கள். நிலத்தை இவ்வளவுக்குத்தான் விற்றீர்களா என்று பேதுரு கேட்ட பொழுது சப்பீராள் ஆம், என்று பொய் சொல்லி தண்டனையை பெற்றனர். மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருக்கிறபடியால் மனுஷரைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்க வேண்டியதில்லை. ( யோவான் 2: 24, 25)
தேவன் நம்முடைய உபத்திரவங்களையும், ஆத்தும வியாகுலங்களையும் அறிந்திருக்கிறார். நாம் அனுபவிக்கிற நிந்தையையும் அவமானத்தையும் அறிந்திருக்கிறார். நம்முடைய புத்தியீனத்தையும், பெலவீனத்தையும் அறிந்திருக்கிறார். நாம் பேசுவதற்கு முன்பே நம் வார்த்தைகளை அறிந்திருக்கிறார். நம் இருதயத்தை சோதித்து அறிந்திருக்கிற தேவனின் பார்வைக்கு ஒன்றும் தப்பாது. அவருடைய கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை. கர்த்தர் எல்லாம் அறிந்தவர். நமது நினைவுகள், சிந்தனைகள் யாவையும் நன்கு அறிந்தவர், அது மாத்திரமல்ல நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகள், கடமைகளில் நாம் எவ்வளவு உண்மையுள்ளவர்களாயிருந்தோம், இருக்கிறோம் என்பதையும் தேவன் அறிவார். நாம் எவ்வளவு பணம், பதவி உடையவர்களாயிருந்தாலும் கர்த்தரை நேசித்து, அவர் உறவிலே களிகூர்ந்து அவருக்காக வாழ்கிறவர்களாய் இருக்கிறோமா என்பதை மட்டுமே தேவன் பார்க்கிறார். எத்தனை வருடங்கள் கர்த்தருக்காக உழைத்தோம், எவ்வளவு பெரிய காரியங்களை சாதித்தோம் என்ற அடிப்படையில் தேவன் நமக்கு தீர்ப்பளிப்பதில்லை. மாறாக நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை எவ்வாறு உண்மையாய் செய்தோம் என்பதை அறிவார்.
உண்மையுள்ளவர்களுக்காக தேவன் மகத்துவமான காரியங்களையும், மகிமையான பலனையும் வைத்திருக்கிறார். வேஷமான வாழ்க்கை வாழ்ந்து சக மனிதர்களையும் ஏமாற்றி விடலாம். ஆனால் தேவன் சகலத்தையும் அறிவார். தேவனின் "இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது" (139:6) எனக்கன்பானவர்களே, நம்மை ஆராய்ந்து, இருதயத்தை அறிந்து, சோதித்து, சிந்தனைகளை அறிந்த ஆண்டவர் வேதனை உண்டாக்கும் வழியை நம்மை விட்டு நீக்கி, நித்தியராஜ்யத்துக்கு பங்குள்ளவர்களாக வாழ உதவி செய்வாராக ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:-
நமது வளாகத்தில் ஜெப கோபுரம் கட்டப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864