By Village Missionary Movement
Thursday, 03-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 03.04.2025
ஜெபத்தைக் கேட்கிறவர்
"ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்" - சங்கீதம் 65:2
அலுவலகத்தில் என்னோடு வேலை பார்த்த சகோதரர் தன்னுடைய நண்பருடைய இரட்சிப்புக்காக 25 வருடங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவருடைய மனதிலே இவ்வளவு வருடம் ஜெபித்து விட்டோம் இனி என்ன இரட்சிக்கப்படவா போகிறார்? என்று நினைத்து நண்பருக்காக ஜெபிக்கிறதை விட்டுவிட்டார். ஆனால் ஒரு முறை எந்த நண்பருக்காக ஜெபித்தாரோ அந்த நண்பரை சென்னையில் கண்டார், அவர் இரட்சிக்கப்பட்டிருந்தார். அவரிடத்திலே எப்பொழுது இரட்சிக்கப்பட்டீர்கள்? என்று கேட்கும் போது, சில வருடங்கள் முன்னதாக என்று பதில் கூறினார்.
யோசித்துப் பாருங்கள், நம் தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர் மாத்திரமல்ல, மாம்சமான யாவரும் அவரிடத்தில் வருவார்கள் என்று பதிலும் சொல்லப்படுகிறது. நாம் எந்த அளவிற்கு பிறருடைய இரட்சிப்பிற்காக விசுவாசத்தோடு ஜெபிக்கிறோமோ, அந்த அளவிற்கு தேவன் கிரியை செய்ய முடியும். முதலாவது நம்முடைய தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர் என்பதை விசுவாசித்து விட்டால் கட்டாயம் நாம் ஜெபிக்க ஆரம்பித்து விடுவோம். விசுவாசம் இல்லாத படி ஆண்டவரிடத்திலே ஜெபிப்போமானால் அந்த ஜெபம் வீணானது என்று வேதம் சொல்லுகிறது. மேலும் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்று மத்தேயு 21: 22 இல் வாசிக்கிறோம். எனவே, அவரிடத்தில் ஜெபிக்கும் போது நம்முடைய ஜெபம் விசுவாசமுள்ள ஜெபமாய் இருக்க வேண்டும். அதே சமயத்தில் ஆண்டவர் எப்படிப்பட்டவர், எந்த அளவிற்கு வல்லமை உள்ளவர் என்பதை உணர்ந்தவர்களாய் ஜெபிக்க வேண்டும். தன் வேலைக்காரனுக்காக ஜெபிக்கிற நூற்றுக்கு அதிபதி, ஆண்டவர் எந்த அளவிற்கு வல்லமை உள்ளவர் என்பதை அறிந்து, ' ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே! என் வேலைக்காரன் சொஸ்தமாவான்' என்று கூறுகிறார். இதுதான் நம்முடைய ஜெபமாகவும் இருக்க வேண்டும். நிச்சயமாக ஆண்டவர் நம் ஜெபத்திற்கு பதில் தருவார்.
சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பதை குறித்து, ஆண்டவர் ஒரு உவமையை கூறுகிறார். லூக்கா 18: 1-8 வரை உள்ள வேதபகுதியிலே, அநீதியுள்ள நியாயாதிபதியினிடத்தில் தொடர்ந்து விண்ணப்பிக்கும் பெண், இறுதியில் தனக்கான நியாயத்தை பெறுகிறார். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிற தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராய் இருந்து, அவர்களுக்கு நியாயம் செய்யாமல் இருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயம் செய்வார். "கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான், தேடுகிறவன் கண்டடைகிறான், தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்" அல்லேலூயா!
- P.V . வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:
வட்டார எழுப்புதல் ஜெபநாளில் அநேகர் புதிதாக பங்கு பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864