By Village Missionary Movement
Wednesday, 02-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 02.04.2025
புத்தி கூர்மை
"...தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது..." - 1 பேதுரு 1:13
பிரபல ஆங்கில பிரசங்கியார் ஸ்பர்ஜன் (1834-1892) தன்னுடைய வாழ்க்கையை முழு மூச்சில் தேவனுக்காக வாழ்ந்துள்ளார். தன் 19 ஆம் வயதில் போதகரானார். வெகு விரைவிலேயே பெரிய நற்செய்தி கூட்டத்தில் பிரசங்கித்தார். தன்னுடைய எல்லா பிரசங்கங்களையும் தானே தொகுத்து அவைகளை 63 பதிப்புகளாக வெளியிட்டார். அத்துடன் பல்வேறு விளக்கவுரைகள், ஜெபத்தை குறித்த புத்தகங்கள் மற்றும் பல படைப்புகளை கொடுத்துள்ளார். வாரத்துக்கு ஆறு புத்தகங்களை படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய ஒரு பிரசங்கத்தில் "ஒன்றும் செய்யாமல் இருப்பதே, பாவத்திலும் பெரிய பாவம். அது பலரையும் பாதிக்கிறது. கொடூரமான தன்மை அது. தேவனே ஒன்றும் செய்யாமலிருக்கும் இந்த பாவத்தினின்று எங்களை பாதுகாப்பீராக" என்று பிரசங்கித்திருக்கிறார். ஸ்பர்ஜன் பிரசங்கியாரை பற்றி அவரது நண்பர்கள் கூறும் போது அவர் மிகவும் புத்தி கூர்மையான மனிதர் என்று குறிப்பிடுகிறார்கள்.
இன்றைய தியானத்தில் புத்தி கூர்மையை பற்றி வாசிக்கின்றோம். ஸ்பர்ஜன் போன்று அநேக தேவ மனிதர்கள் தேவ ஆவியானவர் உதவியுடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். பொது வாழ்விலும், கிறிஸ்தவத்திலும் புத்தி கூர்மை அதாவது தெளிந்த புத்தி என்பது மிகவும் அவசியமாக உள்ளது. "பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்: விவேகியோ தன் நடையின் மேல் கவனமாயிருக்கிறான் என்று சாலொமோன் எழுதுகிறார். தெளிந்த புத்தியில்லாதவர்கள் தங்கள் நடையின் மேல், அதாவது வாழ்க்கையில் சிறப்பாக காணப்படுவதில்லை. பேதுரு தனது நிருபத்தில் எழுதும்போது, தெளிந்த புத்தியை குறித்து மூன்று வெவ்வேறு இடங்களில் நமக்கு ஆலோசனையாக கூறி உணர்த்துகிறார். (1:13,4:7,5:8)
வேதாகமத்தில் புத்தியுள்ள கன்னிகைகள், புத்தியில்லாத கன்னிகைகள் என இரண்டு கூட்டத்தாரைப் பற்றி வாசிக்கிறோம். மணவாளனின் வருகைக்காக புத்தியுள்ளவர்கள் ஆயத்தமாய் தெளிவான சிந்தையோடு காணப்பட்டனர். புத்தியில்லாதவர்களோ, அசட்டுத்தனத்தோடு சோம்பலாய் காணப்பட்டனர். இதன் மூலம் கிருபையை இழந்து போயினர். ஆம், சோம்பல், நிர்விசாரம், தூக்கம் இருப்பவர்களிடம் தெளிந்த புத்தி இருக்காது. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின் மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள் என்ற பேதுருவின் வார்த்தையை நினைவு கூறுவோம்.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே, "ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், போனோம்" என்று வாழாமல், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக, அழகுள்ளதாக மாற்றும்படி தெளிந்த புத்தியோடு வாழ்வதற்கு பிரயாசப்படுவோம். தேவன் நமக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்.
- Bro. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
லெந்து கால கூட்டங்களில் நம் ஊழியர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864