By Village Missionary Movement
Sunday, 30-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 30.03.2025 (Kids Special)
யானையின் எடை என்ன?
"கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்” - நீதிமொழிகள் 2:6
ஹய்யா! யானை வருது பாரு... நான் தொட்டுப் பார்க்க போறேன், வாழைப்பழம் கொடுப்பேன், காசு கொடுப்பேன் என்று போட்டி போட்டுக் கொண்டு யானையைப் பார்க்க எல்லா குட்டிப் பிள்ளைகளும் ஆசையாய் ஓடுவீங்க தானே! யானை என்றால் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்! சரி யானையோட எடை என்னவென்று தெரியுமா? தெரியாதா O.k. அதைப்பற்றிய ஒரு கதை கேட்போமா?
சஞ்சீவ், சரண் என இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. சஞ்சீவ் ரொம்ப கஷ்டப்படுற குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் நன்றாக ஜெபிப்பான். புத்திசாலித்தனமா பேசுவான். நல்லா படிக்கின்ற சஞ்சீவ் கிட்ட சரண் தெரியாத பாடங்களைக் கேட்டு படிப்பான். கணக்குப் பாடத்தை பொறுமையா சொல்லிக் கொடுப்பான். தெரியாத பாடத்தை தெரிந்தவர்களிடம் கேட்டுப் படிப்பது தவறேயில்லை. விடுமுறை நாட்களில் நண்பர்களோடு இணைந்து மைதானத்தில் விளையாடுவது வழக்கம். அப்படி விளையாடிக் கொண்டிருக்கும் போது தண்டோரா அடிக்கிற சத்தம் கேட்டது. சொல்லப்போற செய்தி என்னவென்றால் யானையின் எடையை சொல்பவருக்கு தகுந்த பரிசளிக்கப்படும் என்ற செய்தியை சொல்லிக் கொண்டே போனார் ஒருவர். டேய் சஞ்சீவ் நீதான் புத்திசாலி கண்டிப்பா சொல்லிடுவ என்று சொன்னான் சரண்.
ஊரெல்லாம் இதேப் பேச்சுத்தான். இயேசப்பாவிடம் Prayer பண்ணி விட்டு மன்னரை சந்திக்கச் சென்றான் சஞ்சீவ். யானையின் எடையை காண்பிக்கிறேன் மன்னா யானையைத் தாங்கும் அளவிற்கு படகு ஒன்று வேண்டும் என்றான். படகில் வைத்து எப்படி எடையைச் சொல்ல முடியும் என்று மன்னனுக்குத் தோன்றினாலும், சரி மூன்று நாள் கழித்து வா என்று சொன்னார். மூன்று நாள் கழித்து ராஜா, மந்திரி எல்லாரும் யானையைத் தாங்கும் படகுடன் ஆற்றங்கரைக்கு வந்தார்கள். சஞ்சீவ் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் யானையை படகில் ஏற்றச் சொன்னான். அது தண்ணீரில் மிதக்கும் போது எந்த அளவு மூழ்கினது என்பதை படகில் ஒரு கோடு போட்டுக் குறித்துக் கொண்டான். பின்பு யானையை இறக்கி விட்டு கற்களை ஏற்ற சொன்னான். சரியாக அவன் கோடு போட்ட அளவிற்கு படகு மூழ்கியது. திரும்பவும் படகை கரைக்குத் தள்ளி, இது தான் மன்னரே யானையின் எடை! பெரிய தராசை வைத்து ஐந்தே நிமிடத்தில் கற்களை எடைபோட்டு யானையின் எடையைப் பார்த்துவிட்டான் சஞ்சீவ். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மன்னருக்கு ரொம்ப ஆச்சரியம். சிறுவனாயிருக்கிற உனக்கு இவ்வளவு ஞானமா? என்று சொல்லி சிறுவனை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், அவன் குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்ட மன்னர் தகுந்த பரிசுகளைக் கொடுத்து வாழ்த்தினார்.
என்ன குட்டிச் செல்லங்களே! எனக்கு ஞானமே இல்லை. படிப்பில் ரொம்ப பின்தங்கி இருக்கிறேன் என்று கவலையோடு இருக்கிறீர்களா? இயேசப்பா தான் ஞானத்தைக் கொடுக்க முடியும். அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ள ஆசையா? பிறகென்ன இப்பொழுதே முழங்கால் போடுங்க ஜெபிக்க ஆரம்பிங்க... O. k .bye...
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864