By Village Missionary Movement
Tuesday, 25-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 25.03.2025
அடங்கியிரு
"ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்" - 1 பேதுரு 5:6
ஒரு சிறுவன் தன் தந்தையுடன் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு கிளம்பினர். அப்பொழுது கடை முதலாளி, சமர்த்தாக தோற்றமளித்த அச்சிறுவனிடம் ஒரு மிட்டாய் பாட்டிலை காட்டி எவ்வளவு மிட்டாய் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும்படி கூறினார். அவனோ அப்பாவை பார்த்தான். அவரும் அவனை எடுத்துக் கொள்ளும்படி கூறினார். முடிவில் அவன் தந்தையே அந்த பாட்டிலில் இருந்து மிட்டாய் எடுத்து அவனிடம் கொடுத்தார். இருவரும் கடையை கடந்து வீட்டின் அருகே வந்ததும் தகப்பனார் அந்த சிறுவனிடம் நீயே ஏன் மிட்டாயை எடுத்துக் கொள்ளவில்லை என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் அப்பா உங்கள் கை பெரியது எனவே நீங்கள் எடுத்துக் கொடுத்தால் அதிகம் எனக்கு கிடைக்கும். நானே எடுத்தால் கொஞ்சம் தான் கிடைக்கும். அதனால் தான் நீங்கள் எடுத்துக் கொடுக்கும் வரைக்கும் காத்துக் கொண்டிருந்தேன் என்று கூறினான்.
வேதத்தில் 1 நாளாகமம் 4 : 9,10 வசனங்களில் யாபேஸ் என்பவரை பற்றி பார்க்கிறோம். அவருடைய தாயார் எந்த நிலையில் அவரை பெற்று எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அவனை பெற்றெடுத்தாள் என்று புரிகிறது. ஏனென்றால் அவருடைய தாயார், நான் துக்கத்தோடே இவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்(1 நாளாகமம் 4 : 9) என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எவ்வளவு துன்பமான காரியம் பாருங்கள். ஆனால் யாபேஸ் தேவனை நோக்கி ஜெபித்தார். தேவன் ஒருவரே அவரை உயர்த்த முடியும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார். தேவனின் பலத்த கைக்குள் அடங்கி இருந்தார். தேவன் அவரை அவருடைய சகோதரரை பார்க்கிலும் கனம் பெற்றவராக ஆசீர்வதித்தார். ஆம், யாபேஸ் கர்த்தர் தன்னை ஆசீர்வதிக்கும்வரை காத்திருந்தார்.
அன்பான ஆண்டவரின் பிள்ளையே! யாபேஸைப் போல் உன் வாழ்க்கை இருக்கலாம் அல்லது நீங்கள் தவறு செய்து அதற்காக கூனிக்குறுகிப்போய், ஆதாமைப் போல் ஒளிந்து கொண்டிருக்கலாம். ஆண்டவரிடம் முழு மனதோடு உங்களை ஒப்படைத்து பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள். சர்வ வல்ல தேவனை நோக்கி கண்ணீரோடு விண்ணப்பம் செய்து அவர் நம்மை ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரை நாம் அமர்ந்திருந்து அவரே தேவன் என அறிந்து பொறுமையோடு காத்திருக்கும் போது ஆண்டவர் நம்மை உயர்த்துவார். நம் தேவன் வல்லமை நிறைந்தவர். மகிமையான காரியங்களை நமக்கு நிச்சயம் செய்வார். "நீர் சர்வ வல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்;..." யோபு 22 : 23
- Mrs. ஷீலா ஜான்
ஜெபக்குறிப்பு:-
இன்று திருச்சியில் நடைபெறும் கிராம ஊழியர்கள் மாநாட்டை தேவன் ஆசீர்வதிக்க; அநேக ஊழியர்கள் பங்குபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864